உலகத்தொல்காப்பிய மன்றம்

1. அகத்திணையியல்

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.

1

அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே.

2

முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலும் காலை முறைசிறந் தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை.

3

முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.

4

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.

5

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.

6

பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப.

7

வைகறை விடியல் மருதம் எற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்.

8

நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.

9

பின்பனி தானும் உரித்தென மொழிப.

10

இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்
உரிய தாகும் என்மனார் புலவர்.

11

திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
நிலன்ஒருங்கு மயங்குதல் இன்றென மொழிப
புலன்நன் குணர்ந்த புலமை யோரே.

12

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே.

13

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலைத் திணைக்குரிப் பொருளே.

14

கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தஅவண் இரங்கலும்
உண்டென மொழிப ஓரிடத் தான.

15

கலந்த பொழுதும் காட்சியும் அன்ன.

16

முதலெனப் படுவது ஆயிரு வகைத்தே.

17

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருஎன மொழிப.

18

எந்நில மருங்கின் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும்.

19

பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய
திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே.

20

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே.

21

ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை
ஆனா வகைய திணைநிலைப் பெயரே.

22

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இல புறத்து என்மனார் புலவர்.

23

ஏவல் மரபின் ஏனோரும் உரியர்
ஆகிய நிலைமை அவரும் அன்னர்.

24

ஓதல் பகையே தூதுஇவை பிரிவே.

25

அவற்றுள்,
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன.

26

தானே சேறலும் தன்னொடு சிவணிய
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே.

27

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய
முல்லை முதலாச் சொல்லிய முறையான்
பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும்
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே.

28

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே.

29

மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப.

30

உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான.

31

வேந்துவினை இயற்கை வேந்தன் ஒரீஇய
ஏனோர் மருங்கினும் எய்துஇடன் உடைத்தே.

32

பொருள்வயிற் பிரிதலும் அவர்வயின் உரித்தே
உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத் தான.

33

முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை.

34

எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மை யான.

35

தன்னும் அவனும் அவளும் சுட்டி
மன்னும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம்
நன்மை தீமை அச்சம் சார்தல் என்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கித்
தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்
போகிய திறத்து நற்றாய் புலம்பலும்
ஆகிய கிளவியும் அவ்வழி உரிய.

36

ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்
தாமே செல்லும் தாயரும் உளரே.

37

அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே.

38

தலைவரும் விழும நிலையெடுத்து உரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
நீக்கலின் வந்த தம்முறு விழுமமும்
வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
நோய்மிகப் பெருகித்தன் நெஞ்சு கலுழ்ந்தோளை
அழிந்தது களைஎன மொழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு
என்றிவை எல்லாம் இயல்புற நாடின்
ஒன்றித் தோன்றும் தோழி மேன.

39

பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்
ஊரது சார்பும் செல்லும் தேயமும்
ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்
புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு
அழிந்து எதிர்கூறி விடுப்பினும் ஆங்குஅத்
தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும்
சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும்
கண்டோர் மொழிதல் கண்டது என்ப.

40

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும்
ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும்
இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக்
கடைக்கொண்டு பெயர்தலின் கலங்குஅஞர் எய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட
அப்பாற் பட்ட ஒருதிறத் தானும்
நாளது சின்மையும் இளமையது அருமையும்
தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்
அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்
வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு
ஊதியம் கருதிய ஒருதிறத் தானும்
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்
தூது இடையிட்ட வகையி னானும்
ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்
மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும்
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்
பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்
காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்
பரத்தையின் அகற்சியிற் பரிந்தோட் குறுகி
இரத்தலும் தெளித்தலும் எனஇரு வகையொடு
உரைத்திற நாட்டம் கிழவோன் மேன.

41

எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே.

42

நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்.

43

நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே.

44

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும் என்ப.

45

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளாது ஆகும் திணையுணர் வகையே.

46

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலன்எனக்
கொள்ளும் என்ப குறியறிந் தோரே.

47

உள்ளுறுத்து இதனொடு ஒத்துப்பொருள் முடிகஎன
உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்.

48

ஏனை உவமம் தான்உணர் வகைத்தே.

49

காமம் சாலா இளமை யோள்வயின்
ஏமம் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றுஇரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.

50

ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.

51

முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப.

52

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர்.

53

மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்.

54

புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே.

55

2. புறத்திணையியல்

அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் 
புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் 
வெட்சி தானே குறிஞ்சியது புறனே 
உட்குவரத் தோன்றும் ஈர்ஏழ் துறைத்தே.

வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் 
ஆதந்து ஓம்பல் மேவற் றாகும்.

படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி 
புடைகெடப் போகிய செலவே புடைகெட 
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம் 
முற்றின் ஆகிய புறத்திறை முற்றிய 
ஊர்கொலை ஆகோள் பூசல் மாற்றே 
நோயின்று உய்த்தல் நுவலுழித் தோற்றம் 
தந்துநிறை பாதீடு உண்டாட்டு கொடைஎன 
வந்த ஈர்ஏழ் வகையி ற்றாகும்.

மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த 
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே.

வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் 
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை 
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப் 
போந்தை வேம்பே ஆர்என வரூஉம் 
மாபெருந் தானையர் மலைந்த பூவும் 
வாடா வள்ளி வயவர் ஏத்திய 
ஓடாக் கழல்நிலை உளப்பட ஓடா 
உடல்வேந்து அடுக்கிய உன்ன நிலையும் 
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் 
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் 
ஆர்அமர் ஓட்டலும் ஆபெயர்த்துத் தருதலும் 
சீர்சால் வேந்தன் சிறப்பெடுத்து உரைத்தலும் 
தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் 
அனைக்குரி மரபினது கரந்தை அன்றியும் 
வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தல் என்று 
இருவகைப் பட்ட பிள்ளை நிலையும் 
வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறைதூங்க 
நாடவற்கு அருளிய பிள்ளை யாட்டும் 
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் 
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல் என்று 
இருமூன்று மரபின் கல்லொடு புணரச் 
சொல்லப்பட்ட எழுமூன்று துறைத்தே.

வஞ்சி தானே முல்லையது புறனே

எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் 
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே.

இயங்குபடை அரவம் எரிபரந்து எடுத்தல் 
வயங்கல் எய்திய பெருமை யானும் 
கொடுத்தல் எய்திய கொடைமை யானும் 
அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும் 
மாராயம் பெற்ற நெடுமொழி யானும் 
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும் 
வருவிசைப் புனலைக் கற்சிறை போல 
ஒருவன் தாங்கிய பெருமை யானும் 
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும் 
வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும் 
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும் 
அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் 
கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே.

உழிஞை தானே மருதத்துப் புறனே

முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் 
அனைநெறி மரபிற்று ஆகும் என்ப.

10 

அதுவே தானும் இருநால் வகைத்தே.

11 

கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் 
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் 
தொல்லெயிற்கு இவர்தலும் தோலது பெருக்கமும் 
அகத்தோன் செல்வமும் அன்றி முரணிய 
புறத்தோன் அணங்கிய பக்கமும் திறப்பட 
ஒருதான் மண்டிய குறுமையும் உடன்றோர் 
வருபகை பேணார் ஆர்எயில் உளப்பட 
சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே.

12 

குடையும் வாளும் நாள்கோள் அன்றி 
மடையமை ஏணிமிசை மயக்கமும் கடைஇச் 
சுற்றமர் ஒழிய வென்றுகைக் கொண்டு 
முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய 
அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்றதன் 
புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும் 
நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று 
ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் 
மதின்மிசைக் கிவர்ந்தோன் பக்கமும் இகன்மதில் 
குடுமி கொண்ட மண்ணு மங்கலமும் 
வென்ற வாளின் மண்ணொடு ஒன்றத் 
தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ 
வகைநான் மூன்றே துறைஎன மொழிப.

13 

தும்பை தானே நெய்தலது புறனே

14 

மைந்து பொருளாக வந்த வேந்தனைச் 
சென்று தலைஅழிக்கும் சிறப்பிற் றென்ப.

15 

கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் 
சென்ற உயிரின் நின்ற யாக்கை 
இருநிலம் தீண்டா அருநிலை வகையொடு 
இருபாற் பட்ட ஒருசிறப் பின்றே.

16 

தானை யானை குதிரை என்ற 
நோனார் உட்கும் மூவகை நிலையும் 
வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் 
தான்மீண்டு எறிந்த தார்நிலை அன்றியும் 
இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் 
ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் 
கூழை தாங்கிய எருமையும் படையறுத்துப் 
பாழி கொள்ளும் ஏமத் தானும் 
களிறுஎறிந்து எதிர்ந்தோர் பாடும் களிற்றொடு 
பட்ட வேந்தனை அட்ட வேந்தன் 
வாளோர் ஆடும் அமலையும் வாள்வாய்த்து 
இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் 
ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும் 
செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ 
ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் 
பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் 
ஒள்வாள் வீசிய நூழிலும் உளப்படப் 
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.

17 

வாகை தானே பாலையது புறனே

18 

தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் 
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப.

19 

அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் 
ஐவகை மரபின் அரசர் பக்கமும் 
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் 
மறுவில் செய்தி மூவகைக் காலமும் 
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் 
நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும் 
பாலறி மரபின் பொருநர் கண்ணும் 
அனைநிலை வகையொடு ஆங்கெழு வகையான் 
தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்.

20 

கூதிர் வேனில் என்றிரு பாசறைக் 
காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் 
ஏரோர் களவழி அன்றிக் களவழித் 
தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர் 
வென்ற கோமான் முன்தேர்க் குரவையும் 
ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும் 
பெரும்பகை தாங்கும் வேலி னானும் 
அரும்பகை தாங்கும் ஆற்ற லானும் 
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் 
ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் 
சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து 
தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் 
ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும் 
பகட்டி னானும் ஆவி னானும் 
துகள்தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் 
கடிமனை நீத்த பாலின் கண்ணும் 
எட்டுவகை நுதலிய அவையகத் தானும் 
கட்டுஅமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும் 
இடையில் வண்புகழ்க் கொடைமை யானும் 
பிழைத்தோர்த் தாங்கும் காவ லானும் 
பொருளொடு புணர்ந்த பக்கத் தானும் 
அருளொடு புணர்ந்த அகற்சி யானும் 
காமம் நீத்த பாலினானும் என்று 
இருபாற் பட்ட ஒன்பதின் துறைத்தே.

21 

காஞ்சி தானே பெருந்திணைப் புறனே

22 

பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும் 
நில்லா உலகம் புல்லிய நெறித்தே.

23 

மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும் 
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் 
பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் 
புண்கிழித்து முடியும் மறத்தி னானும் 
ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன் 
பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும் 
இன்னன்ன்று இரங்கிய மன்னை யானும் 
இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் 
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும் 
இன்நகை மனைவி பேஎய் புண்ணோன் 
துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் 
நீத்த கணவன் தீர்த்த வேலின் 
பேஎத்த மனைவி ஆஞ்சி யானும் 
நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி 
மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும் 
முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன் 
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ 
ஈரைந்து ஆகும் என்ப பேரிசை 
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் 
ஆய்ந்த பூசல் மயக்கத் தானும் 
தாமே எய்திய தாங்கரும் பையுளும் 
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் 
செல்வோர் செப்பிய மூதா னந்தமும் 
நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து 
தனிமகள் புலம்பிய முது பாலையும் 
கழிந்தோர் தேஎத்துக் அழிபடர் உறீஇ 
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் 
காதலி இழந்த தபுதார நிலையும் 
காதலன் இழந்த தாபத நிலையும் 
நல்லோள் கணவனொடு நனிஅழல் புகீஇச் 
சொல்லிடை யிட்ட பாலை நிலையும் 
ஆய்பெருஞ் சிறப்பின் புதல்வர்ப் பயந்த 
தாய்தப வரூஉம் தலைப்பெயல் நிலையும் 
மலர்தலை உலகத்து மரபுநன்கு அறியப் 
பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு 
நிறையருஞ் சிறப்பின் துறைஇரண்டு உடைத்தே.

24 

பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே 
நாடுங் காலை நாலிரண்டு உடைத்தே.

25 

அமரர்கண் முடியும் அறுவகை யானும் 
புரைதீர் காமம் புல்லிய வகையினும் 
ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப.

26 

வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇப் 
பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் 
முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை 
வண்ணப் பகுதி வரைவின்று ஆங்கே.

27 

காமப் பகுதி கடவுளும் வரையார் 
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்.

28 

குழவி மருங்கினும் கிழவ தாகும்.

29 

ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப

30 

வழக்கொடு சிவணிய வகைமை யான.

31 

மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே.

32 

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற 
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் 
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.

33 

கொற்ற வள்ளை ஓரிடத்தான.

34 

கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் 
அடுத்துஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் 
சேய்வரல் வருத்தம் வீட வாயில் 
காவலர்க் குரைத்த கடைநிலை யானும் 
கண்படை கண்ணிய கண்படை நிலையும் 
கபிலை கண்ணிய வேள்வி நிலையும் 
வேலை நோக்கிய விளக்கு நிலையும் 
வாயுறை வாழ்த்தும் செவியறி வுறூஉம் 
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் 
கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ 
தொக்க நான்கும் உளயென மொழிப.

35 

தாவின் நல்இசை கருதிய கிடந்தோர்க்குச் 
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும் 
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் 
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் 
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ 
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும் 
சிறந்த நாளினில் செற்றம் நீக்கி 
பிறந்த நாள்வயின் பெருமங் கலமும் 
சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும் 
நடைமிகுத் தேத்திய குடைநிழல் மரபும் 
மாணார்ச் சுட்டிய வாள்மங் கலமும் 
மன்எயில் அழித்த மண்ணுமங் கலமும் 
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் 
பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி 
நடைவயின் தோன்றிய இருவகை விடையும் 
அச்சமும் உவகையும் எச்சம் இன்றி 
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் 
காலம் கண்ணிய ஓம்படை உளப்பட 
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின் 
காலம் மூன்றொடு கண்ணிய வருமே.

36 

3. களவியல்

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு 
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் 
காமக் கூட்டம் காணும் காலை 
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் 
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

ஒன்றே வேறே என்றிரு பால்வயின் 
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் 
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப 
மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே.

சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப 
இழிந்துழி இழிபே சுட்ட லான.

வண்டே இழையே வள்ளி பூவே 
கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று 
அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ 
நின்றவை களையும் கருவி என்ப.

நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் 
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்.

குறிப்பே குறித்தது கொள்ளும் ஆயின் 
ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்.

பெருமையும் உரனும் ஆடூஉ மேன.

அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த 
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப.

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் 
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல் 
நோக்குவ எல்லாம் அவையே போறல் 
மறத்தல் மயக்கம் சாக்காடு என்றுஅச் 
சிறப்புடை மரபினவை களவு எனமொழிப.

முன்னிலை ஆக்கல் சொல்வழிப் படுத்தல் 
நன்னயம் உரைத்தல் நகைநனி உறாஅ 
அந்நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல் 
தன்னிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல்என்று 
இன்னவை நிகழும் என்மனார் புலவர்.

10 

மெய்தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல் 
இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல் 
நீடுநினைந்து இரங்கல் கூடுதல் உறுதல் 
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் 
தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇப் 
பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும் 
பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும் 
நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் 
குற்றம் காட்டிய வாயில் பெட்பினும் 
பெட்டவாயில் பெற்று இரவுவலி யுறுப்பினும் 
ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் 
நீரின் குறிப்பின் நிரம்பக் கூறித் 
தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி 
குறைஅவள் சார்த்தி மெய்யுறக் கூறலும் 
தண்டாது இரப்பினும் மற்றைய வழியும் 
சொல்லவள் சார்த்தலின் புல்லிய வகையினும் 
அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கின் 
கேடும் பீடும் கூறலும் தோழி 
நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி 
மடல்மா கூறும் இடனுமார் உண்டே.

11 

பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும் 
அன்புற்று நகினும் அவள்பெற்று மலியினும் 
ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே.

12 

பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப.

13 

முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே; 
பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.

14 

முதலொடு புணர்ந்த யாழோர் மேன 
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே.

15 

இருவகைக் குறிபிழைப் பாகிய இடத்தும் 
காணா வகையின் பொழுதுநனி இகப்பினும் 
தான்அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின் 
காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி 
வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் 
புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழிப் 
பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் 
வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும் 
தாளாண் எதிரும் பிரிவினானும் 
நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் 
வரைதல் வேண்டித் தோழி செப்பிய 
புரைதீர் கிளவி புல்லிய எதிரும் 
வரைவு உடன்படுதலும் ஆங்குதன் புறத்துப் 
புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் 
கிழவோள் மேன என்மனார் புலவர்.

16 

காமத் திணையின் கண்ணின்று வரூஉம் 
நாணும் மடனும் பெண்மைய ஆகலின் 
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை 
நெறிப்பட வாரா அவள் வயினான.

17 

காமம் சொல்லா நாட்டம் இன்மையின் 
ஏமுற இரண்டும் உளஎன மொழிப.

18 

சொல்எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின் 
அல்ல கூற்றுமொழி அவள்வயி னான.

19 

மறைந்து அவற்காண்டல் தற்காட்டுறுதல் 
நிறைந்த காதலின் சொல்எதிர் மழுங்கல் 
வழிபாடு மறுத்தல் மறுத்துஎதிர் கோடல் 
பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் 
கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும் 
இட்டுப்பிரிவு இரங்கினும் அருமைசெய்து அயர்ப்பினும் 
வந்தவழி எள்ளினும் விட்டு உயிர்த்து அழுங்கினும் 
நொந்து தெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும் 
பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும் 
வரும் தொழிற்கு அருமைவாயில் கூறினும் 
கூறிய வாயில் கொள்ளாக் காலையும் 
மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு 
நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் 
உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்செல 
வேற்றுவரைவு வரின்அது மாற்றுதற் கண்ணும் 
நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் 
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி 
ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள் 
அருமை சான்ற நாலிரண்டு வகையின் 
பெருமை சான்ற இயல்பின் கண்ணும் 
பொய்தலை அடுத்த மடலின் கண்ணும் 
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் 
வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும் 
குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் 
வரைவுதலை வரினும் களவு அறிவுரினும் 
தமர்தன் காத்த காரண மருங்கினும் 
தன்குறி தள்ளிய தெருளாக் காலை 
வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் 
தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும் 
வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும் 
பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் 
அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும் 
காமம் சிறப்பினும் அவன்அளி சிறப்பினும் 
ஏமம் சான்ற உவகைக் கண்ணும் 
தன்வயின் உரிமையும் அவன்வயின் பரத்தையும் 
அன்னவும் உளவே ஓரிடத் தான.

20 

வரைவுஇடை வைத்த காலத்து வருந்தினும் 
வரையா நாளிடை வந்தோன் முட்டினும் 
உரைஎனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும் 
தானே கூறும் காலமும் உளவே.

21 

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் 
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனத் 
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு 
காமக் கிழவன் உள்வழிப் படினும் 
தாவில் நல்மொழி கிழவி கிளப்பினும் 
ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே.

22 

நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் 
செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும் 
புணர்ச்சி எதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉம் 
உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை 
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது 
பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் 
குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் 
பெருமையின் பெயர்ப்பினும் உலகுஉரைத்து ஒழிப்பினும் 
அருமையின் அகற்சியும் அவள்அறி வுறுத்துப் 
பின்வா என்றலும் பேதைமை ஊட்டலும் 
முன்உறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும் 
அஞ்சிஅச் சுறுத்தலும் உரைத்துழிக் கூட்டமொடு 
எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும் 
வந்த கிழவனை மாயம் செப்பிப் 
பொறுத்த காரணம் குறித்த காலையும் 
புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணும் 
குறைந்து அவள் படரினும் மறைந்தவள் அருகத் 
தன்னொடும் அவளொடும் முதல்மூன்று அளைஇப் 
பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் 
நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும் 
எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் 
புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும் 
வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தினும் 
புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பினும் 
ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் 
செங்கடு மொழியான் சிதைவுடைத் தாயினும் 
என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ 
அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும் 
ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் 
காப்பின் கடுமை கையற வரினும் 
களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் 
காதல் மிகுதி உளப்படப் பிறவும் 
நாடும் ஊரும் இல்லும் குடியும் 
பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி 
அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ 
அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும் 
ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் 
பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் 
அவன்விலங் குறினும் களம்பெறக் காட்டினும் 
பிறன்வரைவு ஆயினும் அவன்வரைவு மறுப்பினும் 
முன்னிலை அறனெனப் படுதலென் றிருவகைப் 
புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் 
வரைவுடன் பட்டோற் கடாவல் வேண்டினும் 
ஆங்குஅதன் தன்மையின் வன்புறை உளப்பட 
பாங்குற வந்த நாலெட்டு வகையும் 
தாங்கருஞ் சிறப்பின் தோழி மேன.

23 

களவு அலராயினும் காமம் மெய்ப்படுப்பினும் 
அளவமிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும் 
கட்டினும் கழங்கினும் வெறிஎன இருவரும் 
ஒட்டிய திறத்தான் செய்திக் கண்ணும் 
ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் 
காதல் கைம்மிகக் கனவில் அரற்றலும் 
தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும் 
போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக் 
கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும் 
பிரிவின் எச்சத்தும் மகள்நெஞ்சு வலிப்பினும் 
இருபால் குடிப்பொருள் இயல்பின் கண்ணும் 
இன்ன வகையின் பதின்மூன்று கிளவியொடு 
அன்னவை பிறவும் செவிலி மேன.

24 

தாய்க்கும் வரையார் உணர்வு உடம்படினே.

25 

கிழவோன் அறியா அறிவினள் இவள்என 
மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் 
ஐயக் கிளவியின் அறிதலும் உரித்தே.

26 

தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல் 
எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை 
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப் 
பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப.

27 

காமக் கூட்டம் தனிமையின் பொலிதலின் 
தாமே தூதுவர் ஆகலும் உரித்தே.

28 

அவன் வரம்பு இறத்தல் அறம்தனக்கு இன்மையின் 
களம் சுட்டுக் கிளவி கிழவிய தாகும் 
தான் செலற்கு உரிய வழி ஆகலான.

29 

தோழியின் முடியும் இடனுமார் உண்டே.

30 

முந்நாள் அல்லது துணையின்று கழியாது 
அந்நாள் அகத்தும் அதுவரை வின்றே.

31 

பன்னூறு வகையினும் தன்வயின் வரூஉம் 
நன்னய மருங்கின் நாட்டம் வேண்டலின் 
துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகும் 
துணையோர் கருமம் ஆகலான.

32 

ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின் 
தாயெனப்ப டுவோள் செவிலி யாகும்.

33 

தோழி தானே செவிலியது மகளே.

34 

சூழ்தலும் உசாத்துணை நிலைமையின் பொலிமே.

35 

குறையுற உணர்தல் முன்னுற உணர்தல் 
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல் என 
மதியுடம் படுத்தல் ஒருமூ வகைத்தே.

36 

அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது 
பின்னிலை முயற்சி பெறாள்என மொழிப.

37 

முயற்சிக் காலத்து அதற்பட நாடிப் 
புணர்த்தல் ஆற்றலும் அவள்வயி னான.

38 

குறியெனப் படுவது இரவினும் பகலினும் 
அறியக் கிளந்த ஆற்றது என்ப.

39 

இரவுக் குறியே இல்லகத் துள்ளும் 
மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே 
மனையகம் புகாஅக் காலை யான.

40 

பகற்புணர் களனே புறன்என மொழிப 
அவள் அறிவுணர வருவழி யான.

41 

அல்ல குறிப்படுதலும் அவள்வயின் உரித்தே 
அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே.

42 

ஆங்காங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே 
ஓங்கிய சிறப்பின் ஒருசிறை யான.

43 

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் 
துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை.

44 

ஆற்றினது அருமையும் அழிவும் அச்சமும் 
ஊறும் உளப்பட அதனோ ரன்ன.

45 

தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப.

46 

தாய் அறிவுறுதல் செவிலியொடு ஒக்கும்.

47 

அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின் 
அங்குஅதன் முதல்வன் கிழவன் ஆகும்.

48 

வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று 
ஆயிரண் டென்ப வரைதல் ஆறே.

49 

வெளிப்படைதானே கற்பினொடு ஒப்பினும் 
ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக 
வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை.

50 

4. கற்பியல்

கற்பு எனப்படுவது கரணமொடு புணரக் 
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை 
கொடைக்குரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே.

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே 
புணர்ந்துடன் போகிய காலை யான.

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் 
கீழோர்க் காகிய காலமும் உண்டே.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் 
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

கரணத்தின் அமைந்து முடிந்த காலை 
நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் 
எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும் 
அஞ்ச வந்த உரிமைக் கண்ணும் 
நல்நெறிப் படரும் தொல்நலப் பொருளினும் 
பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக் 
குற்றம் சான்ற பொருளெடுத் துரைப்பினும் 
நாமக் காலத்து உண்டுஎனத் தோழி 
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் 
அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் 
சொல்லுறு பொருளின் கண்ணும் சொல்லென 
ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது 
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென 
அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும் 
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் 
அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும் 
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக் 
களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி 
அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும் 
அந்தரத்து எழுதிய எழுத்தின் மான 
வந்த குற்றம் வழிகெட ஒழுகலும் 
அழியல் அஞ்சல் என்றாயிரு பொருளினும் 
தானவள் பிழைத்த பருவத் தானும் 
நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளிப் 
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் 
தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும் 
புதல்வன் பயந்த புனிறுதீர் பொழுதின் 
நெய்அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி 
ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் 
செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் 
பயங்கெழு துணையணை புல்லி புல்லாது 
உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி 
அல்கல் முன்னிய நிறைஅழி பொழுதின் 
மெல்லென் சீறடி புல்லிய இரவினும் 
உறலருங் குரைமையின் ஊடல்மிகுந் தோளைப் 
பிறபிற பெண்டிரின் பெயர்த்தற் கண்ணும் 
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் 
பரிவின் நீக்கிய பகுதிக் கண்ணும் 
நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளும் 
சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும் 
காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும் 
தானவள் பிழைத்த நிலையின் கண்ணும் 
உடன்சேறல் செய்கையொடு அன்னவை பிறவும் 
மடம்பட வந்த தோழிக் கண்ணும் 
வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத் தானும் 
மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும் 
அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் 
பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும் 
காமக் கிழத்தி மனையோள் என்றிவர் 
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் 
சென்ற தேஎத்து உழப்பு நனிவிளக்கி 
இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும் 
அருந்தொழில் முடித்த செம்மல் காலை 
விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும் 
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் 
கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும் 
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇ 
பண்ணமை பகுதி முப்பதினொரு மூன்றும் 
எண்ணருஞ் சிறப்பின் கிழவோன் மேன.

அவனறிவு ஆற்ற அறியும் ஆகலின் 
ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும் 
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில் 
பெருமையின் திரியா அன்பின் கண்ணும் 
கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் 
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் 
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் 
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி 
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ 
நளியின் நீக்கிய இளிவரு நிலையும் 
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு 
அகன்ற கிழவனைப் புலம்பு நனிகாட்டி 
இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த்து அருக்கி 
எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் 
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி 
எங்கையர்க்கு உரையென இரத்தற் கண்ணும் 
செல்லாக் காலை செல்கென விடுத்தலும் 
காமக் கிழத்தி தன்மகத் தழீஇ 
ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும் 
சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி 
அறம்புரி உள்ளமொடு தன்வரவு அறியாமைப் 
புறம்செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும் 
தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் 
அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும் 
கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது 
நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ 
பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும் 
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி 
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி 
காதல் எங்கையர் காணின் நன்றென 
மாதர் சான்ற வகையின் கண்ணும் 
தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை 
மாயப் பரத்தை உள்ளிய வழியும் 
தன்வயின் சிறைப்பினும் அவன்வயின் பிரிப்பினும் 
இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும் 
காமக் கிழத்தியர் நலம் பாராட்டிய 
தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் 
கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை 
வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமை 
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் 
ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் 
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ 
கிழவோள் செப்பல் கிழவது என்ப.

புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந்து 
இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி 
அன்புறு தக்க கிளத்தல் தானே 
கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகும்.

தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும் 
ஆவயின் நிகழும் என்மனார் புலவர்.

பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த 
தெறற்கரு மரபின் சிறப்பின் கண்ணும் 
அற்றம் அழிவுரைப்பினும் அற்றம் இல்லாக் 
கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும் 
சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் 
அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை 
அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் 
பிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி 
இழைத்தாங்கு ஆக்கிக் கொடுத்தற் கண்ணும் 
வணங்கியல் மொழியான் வணங்கற் கண்ணும் 
புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும் 
சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும் 
மாண்நலம் தாஎன வகுத்தற் கண்ணும் 
பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் 
சூள்வயின் திறத்தால் சோர்வுகண்டு அழியினும் 
பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து 
பெறுதகை இல்லாப் பிழைப்பினும் அவ்வழி 
உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய 
கிழவோள் பால்நின்று கெடுத்தற் கண்ணும் 
உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின் 
உணர்த்தல் வேண்டிய கிழவோன் பால்நின்று 
தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும் 
அருமைக் காலத்துப் பெருமை காட்டிய 
எளிமைக் காலத்து இரக்கத் தானும் 
பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் 
பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் 
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் 
காத்த தன்மையின் கண்ணின்று பெயர்ப்பினும் 
பிரியும் காலை எதிர்நின்று சாற்றிய 
மரபுடை எதிரும் உளப்பட பிறவும் 
வகைபட வந்த கிளவி எல்லாம் 
தோழிக்கு உரிய என்மனார் புலவர்.

புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும் 
இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும் 
பல்வேறு புதல்வர்க் கண்டுநனி உவப்பினும் 
மறையின் வந்த மனையோள் செய்வினை 
பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் 
காதல் சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் 
தாய்போல் தழீஇக் கழறியம் மனைவியைக் 
காய்வின்று அவன்வயின் பொருத்தற் கண்ணும் 
இன்நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து 
பின்னர் வந்த வாயிற் கண்ணும் 
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் 
மிகைப்படக் குறித்த கொள்கைக் கண்ணும் 
எண்ணிய பண்ணை என்று இவற்றொடு பிறவும் 
கண்ணிய காமக் கிழத்தியர் மேன.

10 

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் 
மெல்இயல் பொறையும் நிறையும் வல்லிதின் 
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் 
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் 
முகம்புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல் 
அகம்புகல் மரபின் வாயில்கட்கு உரிய.

11 

கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள 
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் 
செவிலிக்கு உரிய ஆகும் என்ப.

12 

சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய.

13 

இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும் 
கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின்.

14 

உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும் 
புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய.

15 

புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் 
சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய.

16 

பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி 
மடத்தகு கிழமை உடைமை யானும் 
அன்பிலை கொடியை என்றலும் உரியள்.

17 

அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி 
அகம்மலி ஊடல் அகற்சிக் கண்ணும் 
வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே.

18 

காமக் கடப்பினுள் பணிந்த கிளவி 
காணும் காலை கிழவோற்கு உரித்தே 
வழிபடு கிழமை அவட்கு இயலான.

19 

அருள் முந்துறுத்த அன்புபொதி கிளவி 
பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே.

20 

களவும் கற்பும் அலர் வரைவு இன்றே.

21 

அலரின் தோன்றும் காமத்து மிகுதி.

22 

கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே.

23 

மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை 
தம்உள ஆதல் வாயில்கட்கு இல்லை.

24 

மனைவி முன்னர்க் கையறு கிளவி 
மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே.

25 

முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும் 
பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர்.

26 

தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும் 
பல்லாற் றானும் ஊடலின் தணித்தலும் 
உறுதி காட்டலும் அறிவுமெய்ந் நிறுத்தலும் 
ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும் 
அணிநிலை உரைத்தலும் கூத்தர் மேன.

27 

நிலம்பெயர்ந்து உரைத்தல் அவள்நிலை உரைத்தல் 
கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய.

28 

ஆற்றது பண்பும் கருமத்து விளைவும் 
ஏவல் முடிவும் வினாவும் செப்பும் 
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் 
தோற்றம் சான்ற அன்னவை பிறவும் 
இளையோர்க்கு உரிய கிளவி என்ப.

29 

உழைக்குறும் தொழிலும் காப்பும் உயர்ந்தோர் 
நடக்கை எல்லாம் அவர்கட் படுமே.

30 

பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவைத் 
தொல்முறை மனைவி எதிர்ப்பாடு ஆயினும் 
மின்னிழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினும் 
இறந்தது நினைஇக் கிழவோன் ஆங்கண் 
கலங்கலும் உரியன் என்மனார் புலவர்.

31 

தாய்போல் கழறித் தழீஇக் கோடல் 
ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப 
கவவொடு மயங்கிய காலை யான.

32 

அவன்சோர்பு காத்தல் கடனெனப் படுதலின் 
மகன்தாய் உயர்பும் தன்னுயர்பு ஆகும் 
செல்வன் பணிமொழி இயல்பு ஆகலான.

33 

எண்ணரும் பாசறை பெண்ணொடு புணரார்.

34 

புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும்.

35 

காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும் 
கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும் 
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும் 
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும் 
அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய.

36 

எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும் 
புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப.

37 

அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின் 
சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர்.

38 

தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல் 
எத்திறத் தானும் கிழத்திக்கு இல்லை 
முற்பட வகுத்த இரண்டலங் கடையே.

39 

கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி 
கிழவோன் வினைவயின் உரிய என்ப.

40 

மொழிஎதிர் மொழிதல் பாங்கற் குரித்தே.

41 

குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும்.

42 

துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன் 
வன்புறுத் தல்லது சேறல் இல்லை.

43 

செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே 
வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும்.

44 

கிழவி நிலையே வினையிடத்து உரையார் 
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்

45 

பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் 
நீத்தகன்று உறையார் என்மனார் புலவர் 
பரத்தையின் பிரிந்த காலை யான.

46 

வேண்டிய கல்வி யாண்டுமூன்று இறவாது.

47 

வேந்துறு தொழிலே யாண்டினது அகமே.

48 

ஏனைப் பிரிவும் அவ்வியல் நிலையும்.

49 

யாறும் குளனும் காவும் ஆடிப் 
பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப.

50 

காமம் சான்ற கடைக்கோட் காலை 
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி 
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் 
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.

51 

தோழி தாயே பார்ப்பான் பாங்கன் 
பாணன் பாட்டி இளையர் விருந்தினர் 
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் 
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப.

52 

வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை 
இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை 
உள்ளம் போல உற்றுழி உதவும் 
புள்இயல் கலிமா உடைமை யான.

53 

5. பொருளியல்

இசைதிரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே 
அசைதிரிந்து இசையா என்மனார் புலவர்.

நோயும் இன்பமும் இருவகை நிலையின் 
காமங் கண்ணிய மரபிடை தெரிய 
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய 
உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல் 
மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும் 
சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச் 
செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும் 
அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும் 
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ 
இருபெயர் மூன்றும் உரிய வாக 
உவம வாயிற் படுத்தலும் உவமம் 
ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி.

கனவும் உரித்தால் அவ்விடத் தான.

தாய்க்கும் உரித்தால் போக்குடன் கிளப்பின்.

பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே 
நட்பின் நடக்கை ஆங்கலங் கடையே.

உயிரும் நாணும் மடனும் என்றிவை 
செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய.

வண்ணம் திரிந்து புலம்புங் காலை 
உணர்ந்தது போல உறுப்பினைக் கிழவி 
புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே.

உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் 
என்னுற் றனகொல் இவையெனின் அல்லதைக் 
கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை.

ஒருசிறை நெஞ்சோடு உசாவும் காலை 
உரியது ஆகலும் உண்டென மொழிப.

தன்வயின் கரத்தலும் அவன்வயின் வேட்டலும் 
அன்ன இடங்கள் அல்வழி எல்லாம் 
மடனொடு நிற்றல் கடனென மொழிப.

10 

அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி 
அறத்தியல் மரபிலள் தோழி என்ப.

11 

எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல் 
கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு 
உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ 
அவ்வெழு வகைய என்மனார் புலவர்.

12 

உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின் 
அப்பொருள் வேட்கைக் கிழவியின் உணர்ப.

13 

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் 
அறிவும் அருமையும் பெண்பா லான.

14 

பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின் 
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் 
தன்னை அழிதலும் அவன்ஊறு அஞ்சலும் 
இரவினும் பகலினும் நீவா என்றலும் 
கிழவோன் தன்னை வாரல் என்றலும் 
நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும் 
புரைபட வந்த அன்னவை பிறவும் 
வரைதல் வேட்கைப் பொருள என்ப.

15 

வேட்கை மறுத்துக் கிளந்தாங்கு உரைத்தல் 
மரீஇய மருங்கின் உரித்தென மொழிப.

16 

தேரும் யானையும் குதிரையும் பிறவும் 
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப.

17 

உண்டற் குரிய அல்லாப் பொருளை 
உண்டன போலக் கூறலும் மரபே.

18 

பொருளென மொழிதலும் வரைநிலை இன்றே 
காப்புக் கைம்மிகுதல் உண்மை யான

19 

அன்பே அறனே இன்பம் நாணொடு 
துறந்த ஒழுக்கம் பழித்து அன்று ஆகலின் 
ஒன்றும் வேண்டா காப்பி னுள்ளே.

20 

சுரமென மொழிதலும் வரைநிலை இன்றே.

21 

உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் 
வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே.

22 

அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின் 
வழக்கென வழங்கலும் பழித்தன்று என்ப.

23 

மிக்க பொருளினுள் பொருள்வகை புணர்க்க 
நாணுத் தலைப்பிரியா நல்வழிப் படுத்தே.

24 

முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல் 
நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே.

25 

தாயத்தின் அடையா ஈயச் செல்லா 
வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா 
எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம் 
அல்ல வாயினும் புல்லுவ உளவே.

26 

ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும் 
வருவகை தானே வழக்கென மொழிப.

27 

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது 
தான்அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்.

28 

பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே 
நிலத்திரிபு இன்றுஅஃது என்மனார் புலவர்.

29 

ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப் 
பிரிதல் அச்சம் உண்மை யானும் 
அம்பலும் அலரும் களவுவெளிப் படுக்குமென்று 
அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும் 
நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் 
போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும்.

30 

வருத்த மிகுதி சுட்டும் காலை 
உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்.

31 

மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் 
நினையும் காலை புலவியுள் உரிய.

32 

நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியின் 
புகழ்தகை வரையார் கற்பின் உள்ளே.

33 

இறைச்சி தானே உரிப்புறத் ததுவே.

34 

இறைச்சியிற் பிறக்கும் பொருளுமார் உளவே 
திறத்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே.

35 

அன்புறு தகுவன இறைச்சியுற் சுட்டலும் 
வன்புறை ஆகும் வருந்திய பொழுதே.

36 

செய்பொருள் அச்சமும் வினைவயின் பிரிவும் 
மெய்பெற உணர்த்தும் கிழவி பாராட்டே.

37 

கற்புவழிப் பட்டவள் பரத்தைமை ஏத்தினும் 
உள்ளத்து ஊடல் உண்டென மொழிப.

38 

கிழவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக் 
கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள்.

39 

தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும் 
மெய்ம்மை யாக அவர்வயின் உணர்ந்தும் 
தலைத்தாட் கழறுஅறம் எதிர்ப்பொழுது இன்றே 
மலிதலும் ஊடலும் அவையலங் கடையே.

40 

பொழுது தலைவைத்த கையறு காலை 
இறந்த போலக் கிளக்கும் கிளவி 
மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு 
அவை நாற்பொருட்கண் நிகழும் என்ப.

41 

இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி 
நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும் 
வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும் 
நல்வகை உடைய நயத்தின் கூறியும் 
பல்வகை யானும் படைக்கவும் பெறுமே.

42 

உயர்மொழிக் கிளவி உறழும் கிளவி 
ஐயக் கிளவி ஆடூஉவிற்கு உரித்தே.

43 

உறுகண் ஓம்பல் தன்னியல்பு ஆகலின் 
உரிய தாகும் தோழிகண் உரனே.

44 

உயர்மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே.

45 

வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் 
தாவின்று உரிய தம்தம் கூற்றே.

46 

உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பெனக் 
கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே.

47 

அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம் 
தன்வயின் வருதலும் வகுத்த பண்பே.

48 

மங்கல மொழியும் வைஇய மொழியும் 
மாறில் ஆண்மையின் சொல்லிய மொழியும் 
கூறிய மருங்கின் கொள்ளும் என்ப.

49 

சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு 
அனைநால் வகையும் சிறப்பொடு வருமே.

50 

அன்னை என்னை என்றலும் உளவே 
தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் 
தோன்றா மரபின என்மனார் புலவர்.

51 

ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா 
கற்பும் ஏரும் எழிலும் என்றா 
சாயலும் நாணும் மடனும் என்றா 
நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு 
ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம் 
நாட்டியல் மரபின் நெஞ்சு கொளின் அல்லது 
காட்ட லாகாப் பொருள என்ப.

52 

இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் 
அவையில் காலம் இன்மை யான.

53 

6. மெய்ப்பாட்டியல்

பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் 
கண்ணிய புறனே நானான்கு என்ப.

நாலிரண் டாகும் பாலுமா ருண்டே.

நகையே அழுகை இளிவரல் மருட்கை 
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று 
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.

எள்ளல் இளமை பேதைமை மடனென்று 
உள்ளப் பட்டநகை நான்கு என்ப.

இளிவே இழவே அசைவே வறுமையென 
விளிவில் கொள்கை அழுகை நான்கே.

மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு 
யாப்புற வந்த இளிவரல் நான்கே.

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு 
மதிமை சாலா மருட்கை நான்கே.

அணங்கே விலங்கே கள்வர் தம்இறையெனப் 
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.

கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச் 
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே.

உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற 
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.

10 

செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று 
அல்லல் நீத்த உவகை நான்கே.

11 

ஆங்கு அவைஒரு பாலாக ஒருபால் 
உடைமை இன்புறல் நடுவுநிலை அருளல் 
தன்மை அடக்கம் வரைதல் அன்பு எனாஅக் 
கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் 
நாணுதல் துஞ்சல் அரற்றுக் கனவெனாஅ 
முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை 
கருதல் ஆராய்ச்சி விரைவு உயிர்பு எனாஅக் 
கையாறு இடுக்கண் பொச்சாப்புப் பொறாமை 
வியர்த்தல் ஐயம் மிகைநடுக்கு எனாஅ 
அவையும் உளவே அவையலங் கடையே.

12 

புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல் 
நகுநயம் மறைத்தல் சிதைவுபிறர்க்கு இன்மையொடு 
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப.

13 

கூழை விரித்தல் காதொன்று களைதல் 
ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலொடு 
கெழீஇய நான்கே இரண்டென மொழிப.

14 

அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் 
இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலொடு 
சொல்லிய நான்கே மூன்றென மொழிப.

15 

பாராட்டு எடுத்தல் மடம்தப உரைத்தல் 
ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் 
கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ 
எடுத்த நான்கே நான்கென மொழிப.

16 

தெரிந்து உடம்படுதல் திளைப்பு வினைமறுத்தல் 
கரந்திடத்து ஒழிதல் கண்டவழி உவத்தலொடு 
பொருந்திய நான்கே ஐந்தென மொழிப.

17 

புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் 
கலங்கி மொழிதல் கையற வுரைத்தலொடு 
விளம்பிய நான்கே ஆறென மொழிப.

18 

அன்ன பிறவும் அவற்றொடு சிவணி 
மன்னிய வினைய நிமித்தம் என்ப.

19 

வினைவுயிர் மெலிவிடத்து இன்மையும் உரித்தே.

20 

அவையும் உளவே அவையலங் கடையே

21 

இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல் 
எதிர்பெய்து பரிதல் ஏதம் ஆய்தல் 
பசியட நிற்றல் பசலை பாய்தல் 
உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல் 
கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் 
பொய்யாக் கோடல் மெய்யே என்றல் 
ஐயஞ் செய்தல் அவன்தமர் உவத்தல் 
அறன்அறிந் துரைத்தல் ஆங்கு நெஞ்சழிதல் 
எம்மெய் ஆயினும் ஒப்புமை கோடல் 
ஒப்புவழி உவத்தல் உறுபெயர் கேட்டல் 
நலத்தக நாடில் கலக்கமும் அதுவே.

22 

முட்டுவயின் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல் 
அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல் 
தூதுமுனவு இன்மை துஞ்சிச் சேர்தல் 
காதல் கைம்மிகல் கட்டுரை இன்மையென்று 
ஆயிரு நான்கே அழிவில் கூட்டம்.

23 

தெய்வம் அஞ்சல் புரையறம் தெளிதல் 
இல்லது காய்தல் உள்ளது உவர்த்தல் 
புணர்ந்துழி உண்மை பொழுதுமறுப் பாக்கம் 
அருள்மிக உடைமை அன்புதொக நிற்றல் 
பிரிவாற் றாமை மறைந்தவை உரைத்தல் 
புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச் 
சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே.

24 

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு 
உருவு நிறுத்த காம வாயில் 
நிறையே அருளே உணர்வொடு திருவென 
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.

25 

நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி 
வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை 
இன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமை 
என்றிவை இன்மை என்மனார் புலவர்.

26 

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் 
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் 
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே.

27 

7. உவமயியல்

வினை பயன் மெய் உரு என்ற நான்கே 
வகைபெற வந்த உவமத் தோற்றம்.

விரவியும் வரூஉம் மரபின என்ப.

உயர்ந்ததன் மேற்றே உள்ளுஞ் காலை.

சிறப்பே நலனே காதல் வலியொடு 
அந்நாற் பண்பும் நிலைக்களம் என்ப.

கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும்.

முதலும் சினையும் என்றாயிரு பொருட்கும் 
நுதலிய மரபின் உரியவை உரிய.

சுட்டிக் கூறா உவமம் ஆயின் 
பொருளெதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே.

உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்.

பொருளே உவமம் செய்தனர் மொழியினும் 
மருளறு சிறப்பின் அஃது உவமமாகும்.

பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக் 
குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய.

10 

அவைதாம், 
அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப 
என்ன மான என்றவை எனாஅ 
ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க 
என்ற வியப்ப என்றவை எனாஅ 
எள்ள விழைய விறப்ப நிகர்ப்பக் 
கள்ளக் கடுப்ப ஆங்கவை எனாஅ 
காய்ப்ப மதிப்பத் தகைய மருள 
மாற்ற மறுப்ப ஆங்கவை எனாஅப் 
புல்ல பொருவ பொற்ப போல 
வெல்ல வீழ ஆங்கவை எனாஅ 
நாட நளிய நடுங்க நந்த 
ஓடப் புரைய என்றவை எனாஅ 
ஆறாறு உவமமும் அன்ன பிறவும் 
கூறும் காலைப் பல்குறிப் பினவே.

11 

அன்ன ஆங்க மான இறப்ப 
என்ன உறழத் தகைய நோக்கொடு 
கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்.

12 

அன்னஎன் கிளவி பிறவொடும் சிவணும்.

13 

எள்ள விழையப் புல்லப் பொருவக் 
கள்ள மதிப்ப வெல்ல வீழ 
என்றாங்கு எட்டே பயனிலை உவமம்.

14 

கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய 
ஒட்ட ஒடுங்க ஓட்ட நிகர்ப்ப என்று 
அப்பால் எட்டே மெய்ப்பால் உவமம்.

15 

போல மறுப்ப ஒப்பக் காய்த்த 
நேர வியப்ப நளிய நந்த என்று 
ஒத்துவரு கிளவி உருவின் உவமம்.

16 

தத்தம் மரபின் தோன்றுமன் பொருளே.

17 

நாலிரண்டு ஆகும் பாலுமார் உண்டே.

18 

பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன் 
வழிமருங்கு அறியத் தோன்றும் என்ப.

19 

உவமப் பொருளின் உற்ற துணரும் 
தெளிமருங்கு உளவே திறத்திய லான.

20 

உவமப் பொருளை உணருங் காலை 
மருவிய மரபின் வழக்கொடு படுமே.

21 

இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே.

22 

பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி 
முன்னை மரபில் கூறுங் காலைத் 
துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே.

23 

உவமப் போலி ஐந்தென மொழிப.

24 

தவலருஞ் சிறப்பின் அத்தன்மை நாடின் 
வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும் 
பிறப்பினும் வரூஉம் திறத்தியல் என்ப.

25 

கிழவி சொல்லின் அவளறி கிளவி 
தோழிக் காயின் நிலம்பெயர்ந்து உரையாது.

26 

கிழவோற் காயின் உரனொடு கிளக்கும் 
ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே.

27 

இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் 
உவம மருங்கில் தோன்றும் என்ப.

28 

கிழவோட்கு உவமம் ஈரிடத்து உரித்தே.

29 

கிழவோற்கு ஆயின் இடம்வரைவு இன்றே.

30 

தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் 
கூறுதற்கு உரியர் கொள்வழி யான.

31 

வேறுபட வந்த உவமத் தோற்றம் 
கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல்.

32 

ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே.

33 

உவமத் தன்மையும் உரித்தென மொழிப 
பயனிலை புரிந்த வழக்கத் தான.

34 

தடுமாறு உவமம் கடிவரை இன்றே.

35 

அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே

36 

நிரல்நிறுத்து அமைத்தல் நிரல்நிறை சுண்ணம் 
வரைநிலை வைத்த மூன்றலங் கடையே.

37 

8. செய்யுளியல்

மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ 
யாத்த சீரே அடி யாப்பு எனாஅ 
மரபே தூக்கே தொடைவகை எனாஅ 
நோக்கே பாவே அளவியல் எனாஅ 
திணையே கைகோள் கூற்றுவகை எனாஅ 
கேட்போர் களனே காலவகை எனாஅ 
பயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஅ 
முன்னம் பொருளே துறைவகை எனாஅ 
மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகையின் 
ஆறுதலை யிட்ட அந்நால் ஐந்தும் 
அம்மை அழகு தொன்மை தோலே 
விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅப் 
பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ 
நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென 
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே.

அவற்றுள், 
மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும் 
மேற்கிளந் தன்ன என்மனார் புலவர்.

குறிலே நெடிலே குறில்இணை குறில்நெடில் 
ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி 
நேரும் நிரையும் என்றிசின் பெயரே.

இருவகை உகரமொடு இயைந்தவை வரினே 
நேர்பும் நிரைபும் ஆகும் என்ப 
குறில்இணை உகரம் அல்வழி யான.

இயலசை முதலிரண்டு ஏனைய உரியசை.

தனிக்குறில் முதலசை மொழிசிதைந் தாகாது.

ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்.

முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ 
நிற்றல் இன்றே ஈற்றடி மருங்கினும்.

குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும் 
ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே.

அசையும் சீரும் இசையொடு சேர்த்தி 
வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே.

10 

ஈரசை கொண்டும் மூவசை புணர்ந்தும் 
சீர்இயைந்து இற்றது சீர்எனப் படுமே.

11 

இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை 
உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர்.

12 

முன்நிரை உறினும் அன்ன வாகும்.

13 

நேரவண் நிற்பின் இயற்சீர்ப் பால.

14 

இயலசை ஈற்றுமுன் உரியசை வரினே 
நிரையசை இயல ஆகும் என்ப.

15 

அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே.

16 

ஒற்று அளபெடுப்பினும் அற்றென மொழிப.

17 

இயற்சீர் இறுதிமுன் நேர்அவண் நிற்பின் 
உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப.

18 

வஞ்சிச் சீரென வகைபெற் றனவே 
வெண்சீர் அல்லா மூவசை என்ப.

19 

தன்பா அல்வழித் தான்அடைவு இன்றே.

20 

வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய.

21 

வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர் 
இன்பா நேரடிக்கு ஒருங்குநிலை இலவே.

22 

கலித்தளை மருங்கின் கடியவும் பெறாஅ.

23 

கலித்தளை அடிவயின் நேர்ஈற்று இயற்சீர் 
நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே.

24 

வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா.

25 

இசைநிலை நிறைய நிற்குவ தாயின் 
அசைநிலை வரையார் சீர்நிலை பெறலே.

26 

இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே 
தளைவகை சிதையாத் தன்மை யான.

27 

வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே.

28 

இன்சீர் இயைய வருகுவது ஆயின் 
வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே.

29 

அந்நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர் 
ஒன்றுதல் உடைய ஓரொரு வழியே.

30 

நாற்சீர் கொண்டது அடிஎனப் படுமே.

31 

அடியுள் ளனவே தளையொடு தொடையே.

32 

அடியிறந்து வருதல் இல்லென மொழிப.

33 

அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே.

34 

நாலெழுத்து ஆதி யாக ஆறெழுத்து 
ஏறிய நிலத்தே குறளடி என்ப.

35 

ஏழெத்து என்ப சிந்தடிக்கு அளவே 
ஈரெழுத் தேற்றம் அல்வழி யான.

36 

பத்தெழுத்து என்ப நேரடிக்கு அளவே 
ஒத்த நாலெழுத்து ஏற்றலங் கடையே.

37 

மூவைந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே 
ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப.

38 

மூவாறு எழுத்தே கழிநெடிற்கு அளவே 
ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப.

39 

சீர்நிலை தானே ஐந்தெழுத்து இறவாது 
நேர்நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும்.

40 

எழுத்தளவு எஞ்சினும் சீர்நிலை தானே 
குன்றலும் மிகுதலும் இல்லென மொழிப.

41 

உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ 
உயிர்த் திறம் இயக்கம் இன்மையான.

42 

வஞ்சி அடியே இருசீர்த் தாகும்.

43 

தன்சீர் எழுத்தின் சிறுமை மூன்றே.

44 

முச்சீரானும் வருமிடன் உடைத்தே.

45 

அசைகூன் ஆகும் அவ்வயி னான.

46 

சீர்கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே.

47 

ஐவகை அடியும் விரிக்கும் காலை 
மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்தும் 
எழுபது வகையின் வழுவில வாகி 
அறுநூற்று இருபத்து ஐந்து ஆகும்மே.

48 

ஆங்ஙனம் விரிப்பின் அளவு இறந்தனவே 
பாங்குற உணர்ந்தோர் பன்னும் காலை.

49 

ஐவகை அடியும் ஆசிரியக் குரிய.

50 

விராஅய் வரினும் ஒரூஉநிலை இலவே.

51 

தன்சீர் வகையினும் தளைநிலை வகையினும் 
இன்சீர் வகையின் ஐந்தடிக்கும் உரிய 
தன்சீர் உள்வழித் தளைவகை வேண்டா.

52 

சீரியல் மருங்கின் ஓரசை ஒப்பின் 
ஆசிரியத் தளையென்று அறியல் வேண்டும்.

53 

குறளடி முதலா அளவடி காறும் 
உறழ்நிலை இலவே வஞ்சிக்கு என்ப.

54 

அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய 
தளைவகை ஒன்றாத் தன்மை யான.

55 

அளவடி மிகுதி உளப்படத் தோன்றி 
இருநெடில் அடியும் கலியிற்கு உரிய.

56 

நிரைமுதல் வெண்சீர் வந்துநிரை தட்பினும் 
வரைநிலை இன்றே அவ்வடிக் கென்ப.

57 

விராஅய தளையும் ஒரூஉநிலை இன்றே.

58 

இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் 
நிலைக்குரி மரபின் நிற்கவும் பெறுமே.

59 

வெண்தளை விரவியும் ஆசிரியம் விரவியும் 
ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப.

60 

அறுசீர் அடியே ஆசிரியத் தளையொடு 
நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே.

61 

எழுசீர் அடியே முடுகியல் நடக்கும்.

62 

முடுகியல் வரையார் முதல்ஈர் அடிக்கும்.

63 

ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் 
மூவகை அடியும் முன்னுதல் இலவே.

64 

ஈற்றயல் அடியே ஆசிரிய மருங்கின் 
தோற்றம் முச்சீர்த் தாகும் என்ப.

65 

இடையும் வரையார் தொடைஉணர் வோரே.

66 

முச்சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும்.

67 

வஞ்சித் தூக்கே செந்தூக்கு இயற்றே.

68 

வெண்பாட்டு ஈற்றடி முச்சீர்த்து ஆகும் 
அசைச்சீர்த் தாகும் அவ்வழி யான.

69 

நேர்ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும் 
சீர்ஏற்று இறூஉம் இயற்கைய என்ப.

70 

நிரைஅவண் நிற்பின் நேரும் நேர்பும் 
வரைவின்று என்ப வாய்மொழிப் புலவர்.

71 

எழுசீர் இறுதி ஆசிரியம் கலியே.

72 

வெண்பா இயலினும் பண்புற முடியும்.

73 

எழுத்து முதலா ஈண்டிய அடியில் 
குறித்த பொருளை முடிய நாட்டல் 
யாப்பென மொழிப யாப்பறி புலவர்.

74 

பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே 
அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும் 
வண் புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் 
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் 
யாப்பின் வழியது என்மனார் புலவர்.

75 

மரபே தானும் 
நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று.

76 

அகவல் என்பது ஆசிரி யம்மே.

77 

அதாஅன்று என்ப வெண்பா யாப்பே.

78 

துள்ளல் ஓசை கலியென மொழிப.

79 

தூங்கல் ஓசை வஞ்சி ஆகும்.

80 

மருட்பா ஏனை இருசார் அல்லது 
தான்இது என்னும் தனிநிலை இன்றே.

81 

அவ்வியல் அல்லது பாட்டாங்குக் கிளவார்.

82 

தூக்கியல் வகையே ஆங்கென மொழிப.

83 

மோனை எதுகை முரணே இயைபுஎன 
நால்நெறி மரபின தொடைவகை என்ப.

84 

அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும்.

85 

பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும் 
அமைத்தனர் தெரியின் அவையுமார் உளவே.

86 

நிரல்நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும் 
மொழிந்தவற் றியலான் முற்றும் என்ப.

87 

அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை.

88 

அஃதொழித்து ஒன்றின் எதுகை ஆகும்.

89 

ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய.

90 

மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே.

91 

இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே.

92 

அளபெழின் அவையே அளபெடைத் தொடையே.

93 

ஒருசீர் இடையிட்டு எதுகை ஆயின் 
பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே.

94 

இருசீர் இடையிடின் ஒரூஉஎன மொழிப.

95 

சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின் 
சொல்லியற் புலவர்அது செந்தொடை என்ப.

96 

மெய்பெறு மரபின் தொடை வகைதாமே 
ஐஈர் ஆயிரத்து ஆறுஐஞ் ஞூற்றொடு 
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று 
ஒன்பஃது என்ப உணர்ந்திசி னோரே.

97 

தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும்.

98 

தொடைவகை நிலையே ஆங்கென மொழிப.

99 

மாத்திரை முதலா அடிநிலை காறும் 
நோக்குதல் காரணம் நோக்கெனப் படுமே.

100 

ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென 
நாலியற்று என்ப பாவகை விரியே.

101 

அந்நிலை மருங்கின் அறமுத லாகிய 
மும்முதற் பொருட்கும் உரிய என்ப.

102 

பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் 
ஆசிரி யப்பா வெண்பா என்றாங்கு 
ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப.

103 

ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை 
வெண்பா நடைத்தே கலியென மொழிப.

104 

வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே.

105 

வழிபடு தெய்வம் நின்புறங் காப்பப் 
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து 
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே 
கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ.

106 

வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே 
செவியறி வுறூஉஎன அவையும் அன்ன.

107 

வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் 
வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் 
தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று 
ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே.

108 

அவையடக் கியலே அரில்தபத் தெரியின் 
வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என்று 
எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே.

109 

செவியுறை தானே 
பொங்குதல் இன்றி புரையோர் நாப்பண் 
அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே.

110 

ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும் 
குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப.

111 

குட்டம் எருத்தடி உடைத்து மாகும்.

112 

மண்டிலம் குட்டம் என்றிவை இரண்டும் 
செந்தூக்கு இயல என்மனார் புலவர்.

113 

நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே 
கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுளொடு 
ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின.

114 

கைக்கிளை தானே வெண்பா வாகி 
ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே.

115 

பரிபா டல்லே தொகைநிலை வகையின் 
இதுபா என்னும் இயல்நெறி இன்றிப் 
பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப.

116 

கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு 
செப்பிய நான்கும் தனக்கு உறுப்பாகக் 
காமம் கண்ணிய நிலைமைத் தாகும்.

117 

சொற்சீர் அடியும் முடுகியல் அடியும் 
அப்பா நிலைமைக்கு உரிய வாகும்.

118 

கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும் 
முட்டடி இன்றிக் குறைவுசீர்த் தாகியும் 
மொழியசை ஆகியும் வழியசை புணர்ந்தும் 
சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே.

119 

அங்கதம் தானே அரில்தபத் தெரியின் 
செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே.

120 

செம்பொரு ளாயின வசையெனப் படுமே.

121 

மொழி கரந்து மொழியின் அதுபழிகரப் பாகும்.

122 

செய்யுள் தாமே இரண்டென மொழிப.

123 

புகழொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயின் 
செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர்.

124 

வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் 
அங்கதச் செய்யுள் என்மனார் புலவர்.

125 

ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே 
கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே.

126 

அவற்றுள் 
ஒத்தா ழிசைக்கலி இருவகைத் தாகும்.

127 

இடைநிலைப் பாட்டே தரவுபோக் கடையென 
நடைநவின் றொழுகும் ஒன்றென மொழிப.

128 

தரவே தானும் நாலடி யிழிபாய் 
ஆறிரண்டு உயர்வும் பிறவும் பெறுமே.

129 

இடை நிலைப் பாட்டே 
தரவகப் பட்ட மரபினது என்ப.

130 

அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் 
நடைநவின் றொழுகும் ஆங்கென் கிளவி.

131 

போக்கியல் வகையே வைப்பெனப் படுமே 
தரவியல் ஒத்தும் அதனகப் படுமே 
புரைதீர் இறுதி நிலையுரைத் தன்றே.

132 

ஏனை ஒன்றே, 
தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே.

133 

அதுவே, 
வண்ணகம் ஒருபோகு எனஇரு வகைத்தே.

134 

வண்ணகம்தானே, 
தரவே தாழிசை எண்ணே வாரமென்று 
அந்நால் வகையில் தோன்றும் என்ப.

135 

தரவேதானும், 
நான்கும் ஆறும் எட்டும் என்ற 
நேரடி பற்றிய நிலைமைத் தாகும்.

136 

ஒத்து மூன்றாகும் ஒத்தா ழிசையே 
தரவின் சுருங்கித் தோன்றும் என்ப.

137 

அடக்கியல் வாரம் தரவொடு ஒக்கும்.

138 

முதல்தொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே.

139 

எண்ணிடை ஒழிதல் ஏதம் இன்றே 
சின்னம் அல்லாக் காலை யான.

140 

ஒருபோகு இயற்கையும் இருவகைத் தாகும்.

141 

கொச்சக ஒருபோகு அம்போ தரங்கம் என்று 
ஒப்ப நாடி உணர்தல் வேண்டும்.

142 

தரவின் றாகித் தாழிசை பெற்றும் 
தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும் 
எண்ணிடை இட்டுச் சின்னம் குன்றியும் 
அடக்கியல் இன்றி அடிநிமிர்ந் தொழுகியும் 
யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது 
கொச்சக ஒருபோகு ஆகும் என்ப.

143 

ஒருபான் சிறுமை இரட்டியதன் உயர்பே.

144 

அம்போ தரங்கம் அறுபதிற் றடித்தே 
செம்பால் வாரம் சிறுமைக்கு எல்லை.

145 

எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண் 
அடக்கியல் வாரமொடு அந்நிலைக்கு உரித்தே.

146 

ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலான் 
திரியின்றி வருவது கலிவெண் பாட்டே.

147 

தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும் 
ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும் 
வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் 
பாநிலை வகையே கொச்சகக் கலியென 
நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே.

148 

கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும் 
போக்கின் றாகல் உறழ்கலிக்கு இயல்பே.

149 

ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை 
ஆயிரம் ஆகும் இழிபு மூன்றடியே.

150 

நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே 
குறுவெண் பாட்டின் அளவு எழுசீரே.

151 

அங்கதப் பாட்டளவு அவற்றொடு ஒக்கும்.

152 

கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் 
செவியறி வாயுறை புறநிலை என்றிவை 
தொகுநிலை மரபின் அடியில என்ப.

153 

புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் 
திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின் 
வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் 
பண்புற முடியும் பாவின என்ப.

154 

பரிபா டல்லே, 
நாலீர் ஐம்பது உயர்படி ஆக 
ஐயைந் தாகும் இழிபுடிக் கெல்லை.

155 

அளவியல் வகையே அனைவகைப் படுமே.

156 

எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் 
அடிவரை யில்லன ஆறென மொழிப.

157 

அவைதாம், 
நூலி னான உரையி னான 
நொடியொடு புணர்ந்த பிசியி னான 
ஏது நுதலிய முதுமொழி யான 
மறைமொழி கிளந்த மந்திரத் தான 
கூற்றிடை வைத்த குறிப்பி னான.

158 

அவற்றுள், 
நூலெனப் படுவது நுவலுங் காலை 
முதலும் முடிவும் மாறுகோள் இன்றித் 
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி 
உண்ணின் றகன்ற உரையொடு புணர்ந்து 
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே.

159 

அதுவே தானும் ஒருநால் வகைத்தே.

160 

ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் 
இனமொழி கிளந்த ஓத்தி னானும் 
பொதுமொழி கிளந்த படலத் தானும் 
மூன்றுறுப்பு அடக்கிய பிண்டத்தானும் என்று 
ஆங்கவை மரபின் இயலும் என்ப.

161 

அவற்றுள், 
சூத்திரம் தானே 
ஆடி நிழலின் அறியத் தோன்றி 
நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க 
யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே.

162 

நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு 
ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது 
ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர்.

163 

ஒருநெறி இன்றி விரவிய பொருளான் 
பொதுமொழி தொடரின் அதுபடல மாகும்.

164 

மூன்றுறுப் புடக்கிய தன்மைத் தாயின் 
தோன்று மொழிப் புலவர் அதுபிண்டம் என்ப.

165 

பாட்டிடை வைத்த குறிப்பி னானும் 
பாவின் றெழுந்த கிளவி யானும் 
பொருள்மரபு இல்லாப் பொய்ம்மொழி யானும் 
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் என்று 
உரைவகை நடையே நான்கென மொழிப.

166 

அதுவே தானும் இருவகைத் தாகும்.

167 

ஒன்றே மற்றும் செவிலிக் குரித்தே 
ஒன்றே யார்க்கும் வரைநிலை யின்றே.

168 

ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும் 
தோன்றுவது கிளந்த துணிவி னானும் 
என்றிரு வகைத்தே பிசிநிலை வகையே.

169 

நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும் 
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் 
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் 
ஏது நுதலிய முதுமொழி யென்ப.

170 

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த 
மறைமொழி தானே மந்திரம் என்ப.

171 

எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப் 
பொருட்புறத் ததுவே குறிப்பு மொழியே.

172 

பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் 
பாட்டின் இயல பண்ணத் திய்யே.

173 

அதுவே தானும் பிசியொடு மானும்.

174 

அடிநிமிர் கிளவி ஈராறு ஆகும் 
அடியிகந்து வரினும் கடிவரை இன்றே.

175 

கிளரியல் வகையின் கிளந்தன தெரியின் 
அளவியல் வகையே அனைவகைப் படுமே.

176 

கைக்கிளை முதலா ஏழ்பெருந் திணையும் 
முற்கிளந் தனவே முறையி னான.

177 

காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும் 
பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வுமென்று 
ஆங்கநால் வகையினும் அடைந்த சார்பொடு 
மறையென மொழிதல் மறையோர் ஆறே.

178 

மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும் 
இவைமுத லாகிய இயனெறி திரியாது 
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் 
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே.

179 

மெய்பெறும் அவையே கைகோள் வகையே.

180 

பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி 
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு 
அளவியல் மரபின் அறுவகை யோரும் 
களவினில் கிளவிக்கு உரியர் என்ப.

181 

பாணன் கூத்தன் விறலி பரத்தை 
ஆணம் சான்ற அறிவர் கண்டோர் 
பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா 
முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத் 
தொல்நெறி மரபின் கற்பிற்கு உரியர்.

182 

ஊரும் அயலும் சேரி யோரும் 
நோய்மருங் கறிநரும் தந்தையும் தன்ஐயும் 
கொண்டெடுத்து மொழியப் படுதல் அல்லது 
கூற்றவண் இன்மை யாப்புறத் தோன்றும்.

183 

கிழவன் தன்னொடும் கிழத்தி தன்னொடும் 
நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது.

184 

ஒண்தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு 
கண்டோர் மொழிதல் கண்ட தென்ப.

185 

இடைச் சுரமருங்கில் கிழவன் கிழத்தியொடு 
வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன்.

186 

ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு 
மொழிந்தாங் குரியர் முன்னத்தின் எடுத்தே.

187 

மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும் 
நினையுங் காலை கேட்குநர் அவரே.

188 

பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி 
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.

189 

பரத்தை வாயில் எனவிரு வீற்றும் 
கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயனிலவே.

190 

வாயில் உசாவே தம்முள் உரிய.

191 

ஞாயிறு திங்கள் அறிவே நாணே 
கடலே கானல் விலங்கே மரனே 
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே 
அவையல பிறவும் நுதலிய நெறியான் 
சொல்லுந போலவும் கேட்குந போலவும் 
சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர்.

192 

ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும் 
கரும நிகழ்ச்சி இடமென மொழிப.

193 

இறப்பே நிகழ்வே எதிரது என்னும் 
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணரப் 
பொருள்நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்.

194 

இதுநனி பயக்கும் இதன்மா றென்னும் 
தொகுநிலைக் கிளவி பயன் எனப்படுமே.

195 

உய்த்துணர்வு இன்றி தலைவரு பொருண்மையின் 
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்.

196 

எண்வகை இயல்நெறி பிழையா தாகி 
முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே.

197 

சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை 
புல்லிய கிளவி எச்சம் ஆகும்.

198 

இவ்விடத்து இம்மொழி இவரிவர்க்கு உரியஎன்று 
அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பது முன்னம்.

199 

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் 
ஒழுக்கமும் என்றிவை இழுக்குநெறி இன்றி 
இதுவாகித் திணைக்கு உரிப்பொருள் என்னாது 
பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப.

200 

அவ்வவ மாக்களும் விலங்கும் அன்றிப் 
பிறஅவண் வரினும் திறவதின் நாடி 
தத்தம் இயலான் மரபொடு முடியின் 
அத்திறத் தானே துறையெனப் படுமே.

201 

அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் 
இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் 
மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்.

202 

மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி 
உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே.

203 

வண்ணம் தாமே நாலைந்து என்ப.

204 

அவைதாம், 
பாஅ வண்ணம் தாஅ வண்ணம் 
வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம் 
இயைபு வண்ணம் அளபெடை வண்ணம் 
நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம் 
சித்திர வண்ணம் நலிபு வண்ணம் 
அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் 
ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம் 
எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம் 
தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம் 
உருட்டு வண்ணம் முடுகு வண்ணம் என்று 
ஆங்கென மொழிப அறிந்திசி னோரே.

205 

அவற்றுள், 
பாஅ வண்ணம் 
சொற்சீர்த் தாகி நூற்பால் பயிலும்.

206 

தாஅ வண்ணம் 
இடையிட்டு வந்த எதுகைத் தாகும்.

207 

வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே.

208 

மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே.

209 

இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே.

210 

அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்.

211 

நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்.

212 

குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும்.

213 

சித்திர வண்ணம் 
நெடியவும் குறியவும் நேர்ந்துடன் வருமே.

214 

நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்.

215 

அகப்பாட்டு வண்ணம் 
முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே.

216 

புறப்பாட்டு வண்ணம் 
முடிந்தது போன்று முடியா தாகும்.

217 

ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும்.

218 

ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்.

219 

எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்.

220 

அகைப்பு வண்ணம் அறுத்தறுத்து ஒழுகும்.

221 

தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்.

222 

ஏந்தல் வண்ணம் 
சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும்.

223 

உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்.

224 

முடுகு வண்ணம் முடிவு அறியாமல் 
அடியிறந் தொழுகி அதனோர் அற்றே.

225 

வண்ணம் தாமே இவையென மொழிப.

226 

வனப்பியல் தானே வகுக்குங் காலைச் 
சின்மென் மொழியான் சீர்புனைந்து யாப்பின் 
அம்மை தானே அடிநிமிர்வு இன்றே.

227 

செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின் 
அவ்வகை தானே அழகெனப் படுமே.

228 

தொன்மை தானே சொல்லுங் காலை 
உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே.

229 

இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் 
பரந்த மொழியால் அடிநிமிர்ந் தொழுகினும் 
தோலென மொழிப தொன்மொழிப் புலவர்.

230 

விருந்தே தானும் 
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே.

231 

ஞகார முதலா னகார ஈற்றுப் 
புள்ளி இறுதி இயைபு எனப்படுமே.

232 

தெரிந்த மொழியால் செவ்விதிற் கிளந்து 
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் 
புலனென மொழிப புலனுணர்ந் தோரே.

233 

ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது 
குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து 
ஓங்கிய மொழியான் ஆங்கவண் மொழியின் 
இழைபின் இலக்கணம் இயைந்த தாகும்.

234 

செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி 
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல 
வருவன உளவெனினும் வந்தவற் றியலால் 
திரிபின்றி முடித்தல் தெள்ளியோர் கடனே.

235 

9. மரபியல்

மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் 
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் 
கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்று 
ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே.

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் 
சேவும் சேவலும் இரலையும் கலையும் 
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் 
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் 
யாத்த ஆண்பாற் பெயரென மொழிப.

பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் 
மூடும் நாகும் கடமையும் அளகும் 
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் 
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே.

அவற்றுள், 
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை.

தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன.

மூங்கா வெருகெலி மூவரி அணிலொடு 
ஆங்கவை நான்கும் குட்டிக் குரிய.

பறழ் எனப்படினும் உறழ்ஆண்டு இல்லை.

நாயே பன்றி புலி முயல் நான்கும் 
ஆயுங் காலை குருளை என்ப.

நரியும் அற்றே நாடினர் கொளினே.

குட்டியும் பறழும் கூற்றுஅவண் வரையார்.

10 

பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டில்லை 
கொள்ளும் காலை நாயலங் கடையே.

11 

யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் 
ஓடும் புல்வாய் உளப்பட மறியே.

12 

கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப.

13 

மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் 
அவையும் அன்ன அப்பா லான.

14 

யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் 
ஆனோடு ஐந்தும் கன்றெனற் குரிய.

15 

எருமையும் மரையும் வரையார் ஆண்டே.

16 

கவரியும் கராமும் நிகர்அவற் றுள்ளே.

17 

ஒட்டகம் அவற்றொடு ஒருவழி நிலையும்.

18 

குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.

19 

ஆவும் எருமையும் அவைசொலப் படுமே.

20 

கடமையும் மரையும் முதல்நிலை ஒன்றும்.

21 

குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் 
நிரம்ப நாடின் அப்பெயர்க் குரிய.

22 

குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை 
கிழவ அல்ல மக்கட் கண்ணே.

23 

பிள்ளை குழவி கன்றே போத்துஎனக் 
கொள்ளவும் அமையும் ஓர்அறிவு உயிர்க்கே.

24 

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே.

25 

சொல்லிய மரபின் இளமைதானே 
சொல்லும் காலை அவை அல இலவே.

26 

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே 
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே 
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே 
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே 
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே 
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே 
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

27 

புல்லும் மரனும் ஓரறி வினவே 
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

28 

நந்தும் முரளும் ஈரறி வினவே 
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

29 

சிதலும் எறும்பும் மூவறி வினவே 
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

30 

வண்டும் தும்பியும் நான்கறி வினவே 
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

31 

மாவும் புள்ளும் ஐயறி வினவே 
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

32 

மக்கள் தாமே ஆறறி வுயிரே 
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

33 

ஒருசார் விலங்கும் உளவென மொழிப.

34 

வேழக்கு உரித்தே விதந்துகளி றென்றல்.

35 

கேழற் கண்ணும் கடிவரை இன்றே.

36 

புல்வாய் புலிஉழை மரையே கவரி 
சொல்லிய கராமொடு ஒருத்தல் ஒன்றும்.

37 

வார்கோட்டு யானையும் பன்றியும் அன்ன.

38 

ஏற்புடைத் தென்ப எருமைக் கண்ணும்.

39 

பன்றி புல்வாய் உழையே கவரி 
என்றிவை நான்கும் ஏறெனற் குரிய.

40 

எருமையும் மரையும் பெற்றமும் அன்ன.

41 

கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே.

42 

பெற்றம் எருமை புலிமரை புல்வாய் 
மற்றிவை எல்லாம் போத்தெனப் படுமே.

43 

நீர்வாழ் சாதியும் அதுபெறற் குரிய.

44 

மயிலும் எழாலும் பயிலத் தோன்றும்.

45 

இரலையும் கலையும் புல்வாய்க் குரிய.

46 

கலைஎன் காட்சி உழைக்கும் உரித்தே 
நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும்.

47 

மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் 
யாத்த என்ப யாட்டின் கண்ணே.

48 

சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் 
மாயிருந் தூவி மயிலலங் கடையே.

49 

ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம் 
ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப.

50 

ஆண்பால் எல்லாம் ஆணெனற் குரிய 
பெண்பால் எல்லாம் பெண்ணெனற் குரிய 
காண்பவை அவையவை அப்பா லான.

51 

பிடிஎன் பெண்பெயர் யானை மேற்றே.

52 

ஒட்டகம் குதிரை கழுதை மரைஇவை 
பெட்டை என்னும் பெயர்க்கொடைக் குரிய.

53 

புள்ளும் உரிய அப்பெயர்க் கென்ப.

54 

பேடையும் பெடையும் நாடின் ஒன்றும்.

55 

கோழி கூகை ஆயிரண்டு அல்லவை 
சூழுங் காலை அளகெனல் அமையா.

56 

அப்பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே.

57 

புல்வாய் நவ்வி உழையே கவரி 
சொல்வாய் நாடின் பிணையெனப் படுமே.

58 

பன்றி புல்வாய் நாய்என மூன்றும் 
ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை.

59 

பிணவல் எனினும் அவற்றின் மேற்றே.

60 

பெற்றமும் எருமையும் மரையும் ஆவே.

61 

பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய.

62 

எருமையும் மரையும் பெற்றமும் நாகே.

63 

நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே.

64 

மூடும் கடமையும் யாடுஅல பெறாஅ.

65 

பாட்டி என்ப பன்றியும் நாயும்.

66 

நரியும் அற்றே நாடினர் கொளினே.

67 

குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி.

68 

குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் 
மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும் 
செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும் 
வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் 
குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும் 
இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும் 
எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும் 
முடிய வந்த அவ்வழக்கு உண்மையில் 
கடியல் ஆகா கடனறிந் தோர்க்கே.

69 

பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே.

70 

நூலே கரகம் முக்கோல் மணையே 
ஆயும் காலை அந்தணர்க்கு உரிய.

71 

படையும் கொடியும் குடையும் முரசும் 
நடைநவில் புரவியும் களிறும் தேரும் 
தாரும் முடியும் நேர்வன பிறவும் 
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய.

72 

அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்கு 
ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.

73 

பரிசில் பாடாண்திணைத் துறைக் கிழமைப்பெயர் 
நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும் 
பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே.

74 

ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் 
யாரும் சார்த்தி அவையவை பெறுமே.

75 

தலைமைக் குணச்சொலும் தத்தமக்கு உரிய 
நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப.

76 

இடையிரு வகையோர் அல்லது நாடின் 
படைவகை பெறாஅர் என்மனார் புலவர்.

77 

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.

78 

மெய்தெரி வகையின் எண்வகை உணவின் 
செய்தியும் வரையார் அப்பா லான.

79 

கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே.

80 

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது 
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.

81 

வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும் 
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே.

82 

அந்த ணாளர்க்கு அரசுவரை வின்றே.

83 

வில்லும் வேலும் கழலும் கண்ணியும் 
தாரும் மாலையும் தேரும் மாவும் 
மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய.

84 

அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கு இல்லை.

85 

புறக் காழனவே புல்லென மொழிப.

86 

அகக் காழனவே மரமென மொழிப.

87 

தோடே மடலே ஓலை என்றா 
ஏடே இதழே பாளை என்றா 
ஈர்க்கே குலைஎன நேர்ந்தன பிறவும் 
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்.

88 

இலையே முறியே தளிரே தோடே 
சினையே குழையே பூவே அரும்பே 
நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம் 
மரனொடு வரூஉம் கிளவி என்ப.

89 

காயே பழமே தோலே செதிளே 
வீழொடு என்றாங் கவையும் அன்ன.

90 

நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும் 
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் 
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமைத் 
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்.

91 

மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை 
மரபுவழிப் பட்ட சொல்லி னான.

92 

மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்.

93 

வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே 
நிகழ்ச்சி அவர்கட் டாகலான.

94 

மரபுநிலை திரியா மாட்சிய வாகி 
உரைபடு நூல்தாம் இருவகை நிலைய 
முதலும் வழியுமென நுதலிய நெறியின.

95 

வினையின் நீங்கி விளங்கிய அறிவின் 
முனைவன் கண்டது முதல் நூலாகும்.

96 

வழியெனப் படுவது அதன்வழித் தாகும்.

97 

வழியின் நெறியே நால்வகைத் தாகும்.

98 

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து 
அதர்ப்பட யாத்தலொடு அனைமர பினவே.

99 

ஒத்த சூத்திரம் உரைப்பிற் காண்டிகை 
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி 
ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின் 
முப்பத் திருவகை உத்தியொடு புணரின் 
நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்.

100 

உரையெடுத் ததன்முன் யாப்பினும் சூத்திரம் 
புரைதப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும் 
விதித்தலும் விலக்கலும் எனஇரு வகையொடு 
புணர்ந்தவை நாடிப் புணர்க்கவும் பெறுமே.

101 

மேற்கிளந்து எடுத்த யாப்பினுட் பொருளொடு 
சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச் 
சொல்லுங் காலை உரையகத் தடக்கி 
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகித் 
துளக்கல் ஆகாத் துணைமை யெய்தி 
அளக்கல் ஆகா அரும்பொருட்டு ஆகிப் 
பல்வகை யானும் பயன்தெரி புடையது 
சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர்.

102 

பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பின் 
கரப்பின்றி முடிவது காண்டிகை ஆகும்.

103 

விட்டகல்வு இன்றி விரிவொடு பொருந்திச் 
சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா 
ஏது நடையினும் எடுத்துக் காட்டினும் 
மேவாங்கு அமைந்த மெய்நெறித் ததுவே.

104 

சூத்திரத்துட் பொருள் அன்றியும் யாப்புற 
இன்றியமை யாது இயைபவை எல்லாம் 
ஒன்ற உரைப்பது உரைஎனப் படுமே.

105 

மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்த் 
தன்நூ லானும் முடிந்த நூலானும் 
ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித் 
தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத் 
துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்.

106 

சொல்லப் பட்டன எல்லா மாண்பும் 
மறுதலை ஆயினும் மற்றது சிதைவே.

107 

சிதைவில என்ப முதல்வன் கண்ணே.

108 

முதல்வழி ஆயினும் யாப்பினுள் சிதையும் 
வல்லோன் புணரா வாரம் போன்றே.

109 

சிதைவெனப் படுபவை வசையற நாடின் 
கூறியது கூறல் மாறுகொளக் கூறல் 
குன்றக் கூறல் மிகைபடக் கூறல் 
பொருள்இல மொழிதல் மயங்கக் கூறல் 
கேட்போர்க் கின்னா யாப்பிற்று ஆதல் 
பழித்த மொழியான் இழுக்கம் கூறல் 
தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் 
என்ன வகையினும் மனம்கோள் இன்மை 
அன்ன பிறவும் அவற்று விரியாகும்.

110 

எதிர்மறுத்து உணரின் அத்திறத்தவும் அவையே.

111 

ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் 
நுதலியது அறிதல் அதிகார முறையே 
தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தல் 
மொழிந்த பொருளொடு ஒன்ற அவ்வயின் 
மொழியா ததனை முட்டின்றி முடித்தல் 
வாரா ததனான் வந்தது முடித்தல் 
வந்தது கொண்டு வாராதது உணர்த்தல் 
முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே 
ஒப்பக் கூறல் ஒருதலை மொழியே 
தன்கோள் கூறல் முறை பிறழாமை 
பிறனுடம் பட்டது தான் உடம்படுதல் 
இறந்தது காத்தல் எதிரது போற்றல் 
மொழிவாம் என்றல் கூறிற்று என்றல் 
தான்குறி யிடுதல் ஒருதலை அன்மை 
முடிந்தது காட்டல் ஆணை கூறல் 
பல்பொருட்கு ஏற்பின் நல்லது கோடல் 
தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் 
மறுதலை சிதைத்துத் தன்துணிபு உரைத்தல் 
பிறன்கோள் கூறல் அறியாது உடம்படல் 
பொருளிடை யிடுதல் எதிர்பொருள் உணர்த்தல் 
சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல் 
தந்துபுணர்ந் துரைத்தல் ஞாபகம் கூறல் 
உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச் 
சொல்லிய அல்ல பிறவவண் வரினும் 
சொல்லிய வகையான் சுருங்க நாடி 
மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு 
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் 
நுனித்தகு புலவர் கூறிய நூலே.

112 

காணொளி

நிகழ்வுகள்