உலகத்தொல்காப்பிய மன்றம்

1. நூல் மரபு

எழுத்து எனப்படுப 
அகரம் முதல் னகர இறுவாய்  
முப்பஃது என்ப 
சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.

அவைதாம், 
குற்றியலிகரம் குற்றியலுகரம் 
ஆய்தம் என்ற 
முப்பாற்புள்ளியும் எழுத்தோ ரன்ன.

அவற்றுள், 
அ இ உ 
எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் 
ஓர்அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப.

ஆ ஈ ஊ ஏ ஐ 
ஓ ஔ என்னும் அப்பால் ஏழும் 
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.

மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே.

நீட்டம் வேண்டின் அவ்வளபு உடைய 
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்.

கண் இமை நொடிஎன அவ்வே மாத்திரை 
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.

ஔகார இறுவாய்ப் 
பன்னீர் எழுத்தும் உயிரென மொழிப.

னகார இறுவாய்ப் 
பதினெண் எழுத்தும் மெய்என மொழிப.

மெய்யொடு இயையினும் உயிர்இயல் திரியா.

10 

மெய்யின் அளபே அரைஎன மொழிப.

11 

அவ்இயல் நிலையும் ஏனை மூன்றே.

12 

அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே 
இசையிடன் அருகும் தெரியும் காலை.

13 

உட்பெறு புள்ளி உரு ஆகும்மே.

14 

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்.

15 

எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.

16 

புள்ளி இல்லா எல்லா மெய்யும் 
உருஉரு ஆகி அகரமொடு உயிர்த்தலும் 
ஏனை உயிரொடு உருவுதிரிந்து உயிர்த்தலும் 
ஆயீர்இயல உயிர்த்தல் ஆறே.

17 

மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே.

18 

வல்லெழுத்து என்ப க ச ட த ப ற.

19 

மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன.

20 

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள.

21 

அம்மூ ஆறும் வழங்கியல் மருங்கின் 
மெய்ம்மயக்கு உடனிலை தெரியுங் காலை.

22 

ட ற ல ள என்னும் புள்ளிமுன்னர் 
க ச ப என்னும் மூவெழுத்து உரிய.

23 

அவற்றுள், 
லளஃகான் முன்னர் ய வவும் தோன்றும்.

24 

ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் 
தம்தம் இசைகள் ஒத்தன நிலையே.

25 

அவற்றுள், 
ண னஃகான் முன்னர் 
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய.

26 

ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் 
யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே.

27 

மஃகான் புள்ளிமுன் வவ்வும் தோன்றும்.

28 

ய ர ழ என்னும் புள்ளி முன்னர் 
முதலாகு எழுத்து ஙகரமொடு தோன்றும்.

29 

மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும் 
தம்முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே.

30 

அ இ உ அம்மூன்றும் சுட்டு.

31 

ஆ ஏ ஓ அம்மூன்றும் வினா.

32 

அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும் 
உள என மொழிப இசையொடு சிவணிய 
நரம்பின் மறைய என்மனார் புலவர்.

33

2. மொழி மரபு

குற்றியலிகரம் நிற்றல் வேண்டும் 
யாஎன் சினைமிசை உரையசைக் கிளவிக்கு 
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே.

புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே 
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்.

நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் 
குற்றியலுகரம் வல்ஆறு ஊர்ந்தே.

இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே 
கடப்பாடு அறிந்த புணரிய லான.

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி 
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.

ஈறுஇயல் மருங்கினும் இசைமை தோன்றும்.

உருவினும் இசையினும் அருகித் தோன்றும் 
மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா 
ஆய்தம் அஃகாக் காலையான.

குன்றுஇசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும் 
நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே.

ஐ ஔ என்னும் ஆயீரெழுத்திற்கு 
இகர உகரம் இசை நிறைவாகும்.

நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி.

10 

குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே.

11 

ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி 
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட 
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.

12 

மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்.

13 

தம்இயல் கிளப்பின் எல்லா எழுத்தும் 
மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை.

14 

ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற 
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும்.

15 

அவற்றுள், 
ரகார ழகாரம் குற்றொற்று ஆகா.

16 

குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின் 
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல.

17 

செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின் 
னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும்.

18 

னகாரை முன்னர் மகாரம் குறுகும்.

19 

மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்துவேறு இசைப்பினும் 
எழுத்து இயல் திரியா என்மனார் புலவர்.

20 

அகர இகரம் ஐகாரம் ஆகும்.

21 

அகர உகரம் ஔகாரம் ஆகும்.

22 

அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் 
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.

23 

ஓர் அளபு ஆகும் இடனுமார் உண்டே 
தேரும் காலை மொழி வயினான.

24 

இகரம் யகரம் இறுதி விரவும்.

25 

பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும்.

26 

உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா.

27 

க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும் 
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே.

28 

சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே 
அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே.

29 

உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் 
வஎன் எழுத்தொடு வருதல் இல்லை.

30 

ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய.

31 

ஆவொடு அல்லது யகரம் முதலாது.

32 

முதலா ஏன தம்பெயர் முதலும்.

33 

குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் 
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்.

34 

முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது 
அப்பெயர் மருங்கின் நிலையியலான.

35 

உயிர் ஔ எஞ்சிய இறுதியாகும்.

36 

க வவொடு இயையின் ஔவும் ஆகும்.

37 

எ என வரும் உயிர்மெய் ஈறாகாது.

38 

ஒவ்வும் அற்றே ந அலங்கடையே.

39 

ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை.

40 

உ ஊகாரம் நவ்வொடு நவிலா.

41 

உச்சகாரம் இரு மொழிக்கு உரித்தே.

42 

உப்பகாரம் ஒன்றென மொழிப 
இருவயின் நிலையும் பொருட்டு ஆகும்மே.

43 

எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே.

44 

ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் 
அப்பதினொன்றே புள்ளி இறுதி.

45 

உச்சகாரமொடு நகாரம் சிவணும்.

46 

உப்பகாரமொடு ஞகாரையும் அற்றே 
அப்பொருள் இரட்டாது இவணையான.

47 

வகரக் கிளவி நான்மொழி ஈற்றது.

48 

மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த 
னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப 
புகர்அறக் கிளந்த அஃறிணை மேன.

49 

3. பிறப்பியல்

உந்தி முதலா முந்து வளி தோன்றி 
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் 
பல்லும் இதழும் நாவும் மூக்கும் 
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் 
உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி 
எல்லா எழுத்தும் சொல்லும் காலை 
பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல 
திறப்படத் தெரியும் காட்சியான.

அவ்வழிப், 
பன்னீர் உயிரும் தம்நிலை திரியா 
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.

அவற்றுள், 
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்.

இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் 
அப்பால் ஐந்தும் அவற்று ஓரன்ன 
அவைதாம், 
அண்பல் முதல்நா விளிம்புஉறல் உடைய.

உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் 
அப்பால் ஐந்தும் இதழ்குவிந்து இயலும்.

தம்தம் திரிபே சிறிய என்ப.

ககார ஙகாரம் முதல்நா அண்ணம்.

சகார ஞகாரம் இடைநா அண்ணம்.

டகார ணகாரம் நுனிநா அண்ணம்.

அவ்ஆறு எழுத்தும் மூவகைப் பிறப்பின.

10 

அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கில் 
நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத் 
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம்.

11 

அணரி நுனிநா அண்ணம் ஒற்ற 
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்.

12 

நுனிநா அணரி அண்ணம் வருட 
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.

13 

நாவிளிம்பு வீங்கி அண்பல் முதல்உற 
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் 
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.

14 

இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம்.

15 

பல்இதழ் இயைய வகாரம் பிறக்கும்.

16 

அண்ணம் சேர்ந்த மிடற்றுஎழு வளியிசை 
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும்.

17 

மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் 
சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் 
மூக்கின் வளிஇசை யாப்புறத் தோன்றும்.

18 

சார்ந்துவரின் அல்லது தமக்கு இயல்பு இலவெனத் 
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் 
தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி 
ஒத்த காட்சியின் தம்இயல்பு இயலும்.

19 

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து 
சொல்லிய பள்ளி எழுதரு வளியின் 
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து 
அகத்தெழு வளிஇசை அரில்தப நாடி 
அளபின் கோடல் கற்றவர் உரைத்தே  
அஃதிவண் நுவலாது எழுந்துபுறத்து இசைக்கும் 
மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே.

20 

4. புணரியல்

மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின் 
இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது 
அறுநான்கு ஈறொடு நெறிநின்று இயலும் 
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் 
மெய்யே உயிரென்று ஆயீர் இயல.

அவற்றுள், 
மெய்ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல்.

குற்றியலுகரமும் அற்றென மொழிப.

உயிர்மெய் ஈறும் உயிர்ஈற்று இயற்றே.

உயிர்இறு சொல்முன் உயிர்வரு வழியும் 
உயிர்இறு சொல்முன் மெய்வரு வழியும் 
மெய்இறு சொல்முன் உயிர்வரு வழியும் 
மெய்இறு சொல்முன் மெய்வரு வழியும் என்று 
இவ்வென அறியக் கிளக்கும் காலை 
நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி என்று 
ஆயீர் இயல புணர்நிலைச் சுட்டே.

அவற்றுள், 
நிறுத்த சொல்லின் ஈறுஆகு எழுத்தொடு 
குறித்து வருகிளவி முதல் எழுத்து இயையப் 
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் 
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் 
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் 
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் 
மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பென 
ஆங்கு அந்நான்கே மொழிபுணர் இயல்பே.

அவைதாம், 
மெய்பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று 
இவ்வென மொழிப திரியு மாறே.

நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் 
அடையொடு தோன்றினும் புணர்நிலைக்கு உரிய.

மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் 
உரியவை உளவே புணர்நிலைச் சுட்டே.

வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் 
வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும் 
எழுத்தே சாரியை ஆயிரு பண்பின் 
ஒழுக்கல் வலிய புணரும் காலை.

10 

ஐ ஒடு கு இன் அது கண் என்னும் 
அவ் ஆறு என்ப வேற்றுமை உருபே.

11 

வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு 
ஒல்வழி ஒற்றுஇடை மிகுதல் வேண்டும்.

12 

ஆறன் உருபின் அகரக் கிளவி 
ஈறு ஆகு அகரமுனைக் கெடுதல் வேண்டும்.

13 

வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே.

14 

உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்று 
ஆயிரண்டென்ப பெயர் நிலைச் சுட்டே.

15 

அவற்றுவழி மருங்கின் சாரியை வருமே.

16 

அவைதாம், 
இன்னே வற்றே அத்தே அம்மே 
ஒன்னே ஆனே அக்கே இக்கே 
அன்என் கிளவி உளப்படப் பிறவும் 
அன்ன என்ப சாரியை மொழியே.

17 

அவற்றுள், 
இன்னின் இகரம் ஆவின் இறுதி 
முன்னர்க் கெடுதல் உரித்தும் ஆகும்.

18 

அளவாகு மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை 
னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே.

19 

வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன் 
அஃகான் நிற்றல் ஆகிய பண்பே.

20 

னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு.

21 

ஆனின் னகரமும் அதனோரற்றே 
நாள்முன் வரூஉம் வல்முதல் தொழிற்கே.

22 

அத்தின் அகரம் அகரமுனை இல்லை.

23 

இக்கின் இகரம் இகரமுனை அற்றே.

24 

ஐயின் முன்னரும் அவ்இயல் நிலையும்.

25 

எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி 
அக்கின் இறுதிமெய் மிசையொடும் கெடுமே 
குற்றியலுகரம் முற்றத் தோன்றாது.

26 

அம்மின் இறுதி கசதக் காலை 
தன்மெய் திரிந்து ஙஞந ஆகும்.

27 

மென்மையும் இடைமையும் வரூஉம் காலை 
இன்மை வேண்டும் என்மனார் புலவர்.

28 

இன்என வரூஉம் வேற்றுமை உருபிற்கு 
இன்என் சாரியை இன்மை வேண்டும்.

29 

பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப 
வேற்றுமை உருபு நிலைபெறு வழியும் 
தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் 
ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணிச் 
சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்காது 
இடைநின்று இயலும் சாரியை இயற்கை 
உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும்.

30 

அத்தே வற்றே ஆயிரு மொழிமேல் 
ஒற்றுமெய் கெடுதல் தெற்றென்றற்றே 
அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே.

31 

காரமும் கரமும் கானொடு சிவணி 
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை.

32 

அவற்றுள், 
கரமும் கானும் நெட்டெழுத்து இலவே.

33 

வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய.

34 

ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும்.

35 

புள்ளி ஈற்றுமுன் உயிர்தனித்து இயலாது 
மெய்யொடும் சிவணும் அவ்இயல் கெடுத்தே.

36 

மெய்உயிர் நீங்கின் தன்உரு ஆகும்.

37 

எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே 
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்.

38 

எழுத்து ஓரன்ன பொருள்தெரி புணர்ச்சி 
இசையின் திரிதல் நிலைஇய பண்பே.

39 

அவைதாம், 
முன்னப் பொருள புணர்ச்சி வாயின் 
இன்ன என்னும் எழுத்துக்கடன் இலவே.

40 

5. தொகை மரபு

க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும் 
மெல்லெழுத்து இயற்கை சொல்லிய முறையான் 
ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே 
அன்ன மரபின் மொழி வயினான.

ஞ ந ம ய வ எனும் முதலாகு மொழியும் 
உயிர் முதலாகிய மொழியும் உளப்பட 
அன்றி அனைத்தும் எல்லா வழியும் 
நின்ற சொல்முன் இயல்பு ஆகும்மே.

அவற்றுள், 
மெல்லெழுத்து இயற்கை உறழினும் வரையார் 
சொல்லிய தொடர்மொழி இறுதியான.

ண ன என் புள்ளிமுன் யாவும் ஞாவும் 
வினை ஓரனைய என்மனார் புலவர்.

மொழி முதலாகும் எல்லா எழுத்தும் 
வருவழி நின்ற ஆயிரு புள்ளியும் 
வேற்றுமை அல்வழித்திரிபு இடன் இலவே.

வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து அல்வழி 
மேற்கூறு இயற்கை ஆவயினான.

ல ன என வரூஉம் புள்ளி முன்னர் 
த ந என வரின் ற ன ஆகும்மே.

ண ள என் புள்ளிமுன் ட ண எனத் தோன்றும்.

உயிர் ஈறு ஆகிய முன்னிலைக் கிளவியும் 
புள்ளி இறுதி முன்னிலைக் கிளவியும் 
இயல்பு ஆகுநவும் உறழ்பு ஆகுநவும் என்று 
ஆயீர் இயல வல்லெழுத்து வரினே.

ஔவென வரூஉம் உயிர்இறு சொல்லும் 
ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும் 
குற்றியலுகரத்து இறுதியும் உளப்பட 
முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே.

10 

உயிர் ஈறாகிய உயர்திணைப் பெயரும் 
புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும் 
எல்லா வழியும் இயல்பென மொழிப.

11 

அவற்றுள், 
இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்தே.

12 

அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே.

13 

புள்ளி இறுதியும் உயிர்இறு கிளவியும் 
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான் 
தம்மின் ஆகிய தொழிற்சொல் முன்வரின் 
மெய்ம்மை ஆகலும் உறழத்தோன்றலும் 
அம்முறை இரண்டும் உரியவை உளவே 
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும்.

14 

மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் 
வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் 
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் 
உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் 
சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும் 
சாரியை உள்வழித்தன் உருபு நிலையலும் 
சாரியை இயற்கை உறழத் தோன்றலும் 
உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் 
அஃறிணை விரவுப் பெயர்க்கு அவ்இயல் நிலையலும் 
மெய்பிறிது ஆகு இடத்து இயற்கையாதலும் 
அன்ன பிறவும் தன்இயல் மருங்கின் 
மெய்பெறக் கிளந்து பொருள் வரைந்து இசைக்கும் 
ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப.

15 

வேற்றுமை அல்வழி இ ஐ என்னும் 
ஈற்றுப் பெயர்க்கிளவி மூவகை நிலைய 
அவைதாம், 
இயல்பு ஆகுநவும் வல்லெழுத்து மிகுநவும் 
உறழ் ஆகுநவும் என்மனார் புலவர்.

16 

சுட்டுமுதல் ஆகிய இகர இறுதியும் 
எகர முதல் வினாவின் இகர இறுதியும் 
சுட்டுச் சினைநீடிய ஐஎன் இறுதியும் 
யாஎன் வினாவின் ஐஎன் இறுதியும் 
வல்லெழுத்து மிகுநவும் உறழ் ஆகுநவும் 
சொல்லிய மருங்கின் உளஎன மொழிப.

17 

நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும் 
குறியதன் முன்னர்த் தன் உருபு இரட்டலும் 
அறியத் தோன்றிய நெறியியல் என்ப.

18 

ஆறன் உருபினும் நான்கன் உருபினும் 
கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை 
ஈறுஆகு புள்ளி அகரமொடு நிலையும் 
நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான.

19 

நும்என் இறுதியும் அந்நிலை திரியாது.

20 

உகரமொடு புணரும் புள்ளி இறுதி 
யகரமும் உயிரும் வருவழி இயற்கை.

21 

உயிரும் புள்ளியும் இறுதியாகி 
அளவும் நிறையும் எண்ணும் சுட்டி 
உளஎனப் பட்ட எல்லாச் சொல்லும் 
தம்தம் கிளவி தம்மகப் பட்ட 
முத்தை வரூஉம் காலம் தோன்றின் 
ஒத்தது என்ப ஏ என் சாரியை.

22 

அரைஎன வரூஉம் பால்வரை கிளவிக்கு 
புரைவது அன்றால் சாரியை இயற்கை.

23 

குறைஎன் கிளவி முன்வரு காலை 
நிறையத் தோன்றும் வேற்றுமை இயற்கை.

24 

குற்றியலுகரக்கு இன்னே சாரியை.

25 

அத்துஇடை வரூஉம் கலம்என் அளவே.

26 

பனையென் அளவும் காஎன் நிறையும் 
நினையும் காலை இன்னொடு சிவணும்.

27 

அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகி 
உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்தே 
அவைதாம், 
க ச த ப என்றா ந ம வ என்றா 
அகர உகரமொடு அவைஎன மொழிப.

28 

ஈறுஇயல் மருங்கின் இவை இவற்று இயல்பு எனக் 
கூறிய கிளவிப் பல்ஆறு எல்லாம் 
மெய்த் தலைப்பட்ட வழக்கொடு சிவணி 
ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே.

29 

பலர்அறி சொல்முன் யாவர் என்னும் 
பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை 
ஒன்றறி சொல்முன் யாதுஎன் வினாஇடை 
ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும் 
மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே.

30 

6. உருபியல்

அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் 
அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர் 
வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை.

பல்லவை நுதலிய அகர இறுபெயர் 
வற்றொடு சிவணல் எச்சம் இன்றே.

யாஎன் வினாவும் ஆயியல் திரியாது.

சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி 
ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடுமே.

சுட்டுமுதல் ஆகிய ஐஎன் இறுதி 
வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே.

யாஎன் வினாவின் ஐஎன் இறுதியும் 
ஆயியல் திரியாது என்மனார் புலவர் 
ஆவயின் வகரம் ஐயொடும் கெடுமே.

நீஎன் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் 
ஆவயின் னகரம் ஒற்று ஆகும்மே.

ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை.

அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு 
அத்தொடும் சிவணும் ஏழன் உருபே.

ஞ ந என்புள்ளிக்கு இன்னே சாரியை.

10 

சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யும் 
கெட்ட இறுதி இயல்திரிபு இன்றே.

11 

ஏனை வகரம் இன்னொடு சிவணும்.

12 

மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை.

13 

இன்இடை வரூஉம் மொழியுமார் உளவே.

14 

நூம்என் இறுதி இயற்கை ஆகும்.

15 

தாம் நாம் என்னும் மகர இறுதியும் 
யாம்என் இறுதியும் அதன் ஓரன்ன 
ஆ எ ஆகும் யாம்என் இறுதி 
ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் 
ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும்.

16 

எல்லாம் என்னும் இறுதி முன்னர் 
வற்றென் சாரியை முற்றத் தோன்றும் 
உம்மை நிலையும் இறுதியான.

17 

உயர்திணை ஆயின் நம்இடை வருமே.

18 

எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும் 
எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும் 
ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப 
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி 
உம்மை நிலையும் இறுதியான 
தம்இடை வரூஉம் படர்க்கை மேன 
நும்இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே.

19 

தான் யான் என்னும் ஆயீர் இறுதியும் 
மேல் முப்பெயரொடும் வேறுபாடு இலவே.

20 

அழனே புழனே ஆயிரு மொழிக்கும் 
அத்தும் இன்னும் உறழத் தோன்றல் 
ஒத்தது என்ப உணருமோரே.

21 

அன் என் சாரியை ஏழன் இறுதி 
முன்னர்த் தோன்றும் இயற்கைத்து என்ப.

22 

குற்றியலுகரத்து இறுதி முன்னர் 
முற்றத் தோன்றும் இன்என் சாரியை.

23 

நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத் தோன்றும் 
அப்பால் மொழிகள் அல்வழியான.

24 

அவைதாம், 
இயற்கைய ஆகும் செயற்கைய என்ப.

25 

எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்.

26 

ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம் 
எல்லா எண்ணும் சொல்லும் காலை 
ஆன்இடை வரினும் மானம் இல்லை 
அஃது என்கிளவி ஆவயின் கெடுமே 
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.

27 

யாதுஎன் இறுதியும் சுட்டுமுதல் ஆகிய 
ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும் 
ஆய்தம் கெடுதல் ஆவயினான.

28 

ஏழன் உருபிற்குத் திசைப்பெயர் முன்னர் 
சாரியைக் கிளவி இயற்கையும் ஆகும் 
ஆவயின் இறுதி மெய்யொடும் கெடுமே.

29 

புள்ளி இறுதியும் உயிர்இறு கிளவியும் 
சொல்லிய அல்ல ஏனைய எல்லாம் 
தேரும் காலை உருபொடு சிவணி 
சாரியை நிலையும் கடப்பாடு இலவே.

30 

7. உயிர்மயங்கியல்

அகர இறுதிப் பெயர்நிலை முன்னர் 
வேற்றுமை அல்வழிக் க ச த ப தோன்றின் 
தம்தம் ஒத்த ஒற்றுஇடை மிகுமே.

வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும் 
எனஎன் எச்சமும் சுட்டின் இறுதியும் 
ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் 
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே.

சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின் 
ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்.

ய வ முன்வரினே வகரம் ஒற்றும்.

உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது.

நீட வருதல் செய்யுளுள் உரித்தே.

சாவ என்னும் செயஎன் எச்சத்து 
இறுதி வகரம் கெடுதலும் உரித்தே.

அன்ன என்னும் உவமக் கிளவியும் 
அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் 
செய்ம்மன என்னும் தொழிலிறு சொல்லும் 
ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் 
செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும் 
செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும் 
அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும் 
பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட 
அன்றி அனைத்தும் இயல்பென மொழிப.

வாழிய என்னும் செயஎன் கிளவி 
இறுதி யகரம் கெடுதலும் உரித்தே.

உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்.

10 

பலவற்று இறுதி நீடுமொழி உளவே 
செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான.

11 

தொடர்அல் இறுதி தம்முன் தாம்வரின் 
லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்தே.

12 

வல்லெழுத்து இயற்கை உறழத் தோன்றும்.

13 

வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே.

14 

மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே.

15 

மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை.

16 

அத்து அவண் வரினும் வரைநிலை இன்றே.

17 

பலவற்று இறுதி உருபியல் நிலையும்.

18 

ஆகார இறுதி அகர இயற்றே.

19 

செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் 
அவ்இயல் திரியாது என்மனார் புலவர்.

20 

உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி 
மெய்ம்மையாக அகரம் மிகுமே.

21 

ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும் 
யாஎன் வினாவும் பலவற்று இறுதியும் 
ஏவல் குறித்த உரையசை மியாவும் 
தன்தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு 
அன்றி அனைத்தும் இயல்பென மொழிப.

22 

வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே.

23 

குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும் 
அறியத் தோன்றும் அகரக் கிளவி.

24 

இரா என் கிளவிக்கு அகரம் இல்லை.

25 

நிலாவென் கிளவி அத்தொடு சிவணும்.

26 

யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும் 
ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே.

27 

வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை.

28 

மாமரக் கிளவியும் ஆவும் மாவும் 
ஆமுப் பெயரும் அவற்று ஓரன்ன 
அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா 
னகரம் ஒற்றும் ஆவும் மாவும்

29 

ஆன்ஒற்று அகரமொடு நிலையிடன் உடைத்தே.

30 

ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் 
தான்மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே.

31 

குறியதன் இறுதிச் சினைகெட உகரம் 
அறிய வருதல் செய்யுளுள் உரித்தே.

32 

இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் 
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே.

33 

இனி அணி என்னும் காலையும் இடனும் 
வினையெஞ்சு கிளவியும் சுட்டும் அன்ன.

34 

இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி 
நின்ற இகரம் உகரம் ஆதல் 
தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்தே.

35 

சுட்டின் இயற்கை முன் கிளந்தற்றே.

36 

பதக்கு முன்வரினே தூணிக் கிளவி 
முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே.

37 

உரிவரு காலை நாழிக் கிளவி 
இறுதி இகரம் மெய்யொடும் கெடுமே 
டகாரம் ஒற்றும் ஆவயினான.

38 

பனிஎன வரூஉம் காலவேற்றுமைக்கு 
அத்தும் இன்னும் சாரியை ஆகும்.

39 

வளிஎன வரூஉம் பூதக் கிளவியும் 
அவ்இயல் நிலையல் செவ்விது என்ப.

40 

உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே.

41 

புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை.

42 

ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே.

43 

வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை 
ஒல்வழி அறிதல் வழக்கத்தான.

44 

நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு 
ஆன் இடைவருதல் ஐயம் இன்றே.

45 

திங்கள் முன்வரின் இக்கே சாரியை.

46 

ஈகார இறுதி ஆகார இயற்றே.

47 

நீஎன் பெயரும் இடக்கர்ப் பெயரும் 
மீஎன மரீஇய இடம்வரை கிளவியும் 
ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்.

48 

இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் 
உடனிலை மொழியும் உளவென மொழிப.

49 

வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே.

50 

நீஎன் ஒரு பெயர் உருபியல் நிலையும் 
ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்.

51 

உகர இறுதி அகர இயற்றே.

52 

சுட்டின் முன்னரும் அத்தொழிற்று ஆகும்.

53 

ஏனவை வரினே மேல்நிலை இயல்பே.

54 

சுட்டுமுதல் இறுதி இயல்பு ஆகும்மே.

55 

அன்று வருகாலை ஆ ஆகுதலும் 
ஐ வருகாலை மெய்வரைந்து கெடுதலும் 
செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப.

56 

வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே.

57 

எருவும் செருவும் அம்மொடு சிவணித் 
திரிபு இடன் உடைய தெரியும்காலை 
அம்மின் மகரம் செருவயின் கெடுமே 
தம்ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை.

58 

ழகர உகரம் நீடு இடன் உடைத்தே 
உகரம் வருதல் ஆவயினான.

59 

ஒடு மரக்கிளவி உதிமர இயற்றே.

60 

சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும் 
ஒற்று இடைமிகா வல்லெழுத்து இயற்கை.

61 

ஊகார இறுதி ஆகார இயற்றே.

62 

வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் 
நினையும் காலை அவ்வகை வரையார்.

63 

வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே.

64 

குற்றெழுத்து இம்பரும் ஓரெழுத்து மொழிக்கும் 
நிற்றல் வேண்டும் உகரக் கிளவி.

65 

பூஎன் ஒருபெயர் ஆயியல்பு இன்றே 
ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே.

66 

ஊஎன் ஒருபெயர் ஆவொடு சிவணும்.

67 

அக்குஎன் சாரியை பெறுதலும் உரித்தே 
தக்கவழி அறிதல் வழக்கத் தான.

68 

ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும் 
இன்இடை வரினும் மானம் இல்லை.-

69 

எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா 
முன்னிலை மொழிய என்மனார் புலவர் 
தேற்றமும் சிறப்பும் அல்வழியான.

70 

தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும் 
மேற்கூறு இயற்கை வல்லெழுத்து மிகா.

71 

ஏகார இறுதி ஊகார இயற்றே.

72 

மாறுகொள் எச்சமும் வினாவும் எண்ணும் 
கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்.

73 

வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே.

74 

ஏஎன் இறுதிக்கு எகரம் வருமே.

75 

சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே.

76 

பெற்றம் ஆயின் முற்றஇன் வேண்டும்.

77 

ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் 
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே.

78 

சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும்.

79 

விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும் 
அவை முப்பெயரும் சேமர இயல.

80 

பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் 
நினையும் காலை அம்மொடு சிவணும் 
ஐஎன் இறுதி அரை வரைந்து கெடுமே 
மெய்அவண் ஒழிய என்மனார் புலவர்.

81 

பனையின் முன்னர் அட்டு வருகாலை 
நிலைஇன்று ஆகும் ஐஎன் உயிரே 
ஆகாரம் வருதல் ஆவயினான.

82 

கொடிமுன் வரினே ஐ அவண் நிற்பக் 
கடிநிலை இன்றே வல்லெழுத்து மிகுதி.

83 

திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன.

84 

மழைஎன் கிளவி வளிஇயல் நிலையும்.

85 

செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் 
ஐஎன் இறுதி அவாமுன் வரினே 
மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர் 
டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும்.

86 

ஓகார இறுதி ஏகார இயற்றே.

87 

மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும் 
கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்.

88 

ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே.

89 

வேற்றுமைக் கண்ணும் அதன் ஓரற்றே 
ஒகரம் வருதல் ஆவயினான.

90 

இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும்.

91 

உருபியல் நிலையும் மொழியுமார் உளவே 
ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்.

92 

ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர் 
அல்வழியானும் வேற்றுமைக் கண்ணும் 
வல்லெழுத்து மிகுதல் வரைநிலை இன்றே 
அவ்விரு ஈற்றும் உகரம் வருதல் 
செவ்விது என்ப சிறந்திசினோரே.

93

8. புள்ளிமயங்கியல்

ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் 
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் 
வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே 
உகரம் வருதல் ஆவயினான.

ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும்.

நகர இறுதியும் அதன் ஓரற்றே.

வேற்றுமைக்கு உக்கெட அகரம் நிலையும்.

வெரிந் என் இறுதி முழுதும் கெடுவழி 
வரும்இடன் உடைத்தே மெல்லெழுத்து இயற்கை.

ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே.

ணகார இறுதி வல்லெழுத்து இயையின் 
டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.

ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை.

ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே.

விண்என வரூஉம் காயப்பெயர் வயின் 
உண்மையும் உரித்தே அத்துஎன் சாரியை 
செய்யுள் மருங்கின் தொழில்வரு காலை.

10 

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.

11 

கிளைப்பெயர் எல்லாம் கொளத் திரிபு இலவே.

12 

வேற்றுமை அல்வழி எண் என் உணவுப்பெயர் 
வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே.

13 

முரண்என் தொழிற்பெயர் முதலியல் நிலையும்.

14 

மகர இறுதி வேற்றுமை ஆயின் 
துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே.

15 

அகர ஆகாரம் வரூஉம் காலை 
ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே.

16 

மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே 
செல்வழி அறிதல் வழக்கத் தான.

17 

இல்லம் மரப்பெயர் விசைமர இயற்றே.

18 

அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும்.

19 

அகம்என் கிளவிக்குக் கைமுன் வரினே 
முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும் 
வரைநிலை இன்றே ஆசிரியர்க்க 
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான.

20 

இலம்என் கிளவிக்குப் படுவரு காலை 
நிலையலும் உரித்தே செய்யுளான.

21 

அத்தொடு சிவணும் ஆயிரத்து இறுதி 
ஒத்த எண்ணு முன்வரு காலை.

22 

அடையொடு தோன்றினும் அதன் ஓரற்றே.

23 

அளவும் நிறையும் வேற்றுமை இயல.

24 

படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் 
தொடக்கம் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் 
வேற்றுமை ஆயின் உருபியல் நிலையும் 
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான.

25 

அல்லது கிளப்பின் இயற்கை ஆகும்.

26 

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் 
எல்லாம் எனும் பெயர் உருபியல் நிலையும் 
வேற்றுமை அல்வழிச் சாரியை நிலையாது.

27 

மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை.

28 

உயர்திணை ஆயின் உருபியல் நிலையும்.

29 

நும்என் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே.

30 

அல்லதன் மருங்கின் சொல்லும் காலை 
உக்கெட நின்ற மெய்வயின் ஈவர 
இ இடைநிலை இ ஈறுகெட ரகரம் 
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே 
அப்பால் மொழிவயின் இயற்கை ஆகும்.

31 

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.

32 

ஈமும் கம்மும் உரும்என் கிளவியும் 
ஆ முப்பெயரும் அவற்று ஓரன்ன.

33 

வேற்றுமை ஆயின் ஏனை இரண்டும் 
தோற்றம் வேண்டும் அக்குஎன் சாரியை-

34 

வகர மிசையும் மகரம் குறுகும்.

35 

நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன 
அத்தும் ஆன்மிசை வரைநிலை இன்றே 
ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர்.

36 

னகார இறுதி வல்லெழுத்து இயையின் 
றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.

37 

மன்னும் சின்னும் ஆனும் ஈனும் 
பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் 
அன்ன இயல என்மனார் புலவர்.

38 

சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும் 
அப்பண்பு நிலையும் இயற்கைய என்ப.

39 

குயின்என் கிளவி இயற்கை ஆகும்.

40 

எகின் மரம் ஆயின் ஆண்மர இயற்றே.

41 

ஏனை எகினே அகரம் வருமே 
வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும்.

42 

கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல.

43 

மீன்என் கிளவி வல்லெழுத்து உறழ்வே.

44 

தேன்என் கிளவி வல்லெழுத்து இயையின் 
மேல்நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும் 
ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்தே 
வல்லெழுத்து மிகுவழி இறுதி இல்லை.

45 

மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை.

46 

மெல்லெழுத்து இயையின் இறுதியொடு உறழும்.

47 

இறாஅல் தோற்றம் இயற்கை ஆகும்.

48 

ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே.

49 

மின்னும் பின்னும் பன்னும் கன்னும் 
அந்நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல.

50 

வேற்றுமை ஆயின் ஏனை எகினொடு 
தோற்றம் ஒக்கும் கன்என் கிளவி.

51 

இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் 
முதற்கண் மெய்கெட அகரம் நிலையும் 
மெய் ஒழித்து அன்கெடும் அவ்வியற் பெயரே.

52 

ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு 
பெயர் ஒற்று அகரம் துவரக் கெடுமே.

53 

சிறப்பொடு வருவழி இயற்கை ஆகும்.

54 

அப்பெயர் மெய்ஒழித்து அன்கெடு வழியே 
நிற்றலும் உரித்தே அம்என் சாரியை 
மக்கள் முறை தொகூஉம் மருங்கினான.

55 

தானும் பேனும் கோனும் என்னும் 
ஆமுறை இயற்பெயர் திரிபு இடன் இலவே.

56 

தான் யான் எனும் பெயர் உருபியல் நிலையும்.

57 

வேற்றுமை அல்வழிக் குறுகலும் திரிதலும் 
தோற்றம் இல்லை என்மனார் புலவர்.

58 

அழன்என் இறுதிகெட வல்லெழுத்து மிகுமே.

59 

முன்என் கிளவி முன்னர்த் தோன்றும் 
இல்என் கிளவிமிசை றகரம் ஒற்றல் 
தொல்இயல் மருங்கின் மரீஇய மரபே.

60 

பொன் என்கிளவி ஈறுகெட முறையின் 
முன்னர்த் தோன்றும் லகார மகாரம் 
செய்யுள் மருங்கின் தொடர் இயலான.

61 

யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் 
வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே.

62 

தாய்என் கிளவி இயற்கை ஆகும்.

63 

மகன் வினை கிளப்பின் முதல்நிலை இயற்றே.

64 

மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே.

65 

அல்வழி எல்லாம் இயல்பென மொழிப.

66 

ரகார இறுதி யகார இயற்றே.

67 

ஆரும் வெதிரும் சாரும் பீரும் 
மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்.

68 

சார்என் கிளவி காழ்வயின் வலிக்கும்.

69 

பீர் என் கிளவி அம்மொடும் சிவணும்.

70 

லகார இறுதி னகார இயற்றே.

71 

மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும்.

72 

அல்வழி எல்லாம் உறழ்என மொழிப.

73 

தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் 
புகர் இன்று என்மனார் புலமையோரே.

74 

நெடியதன் இறுதி இயல்புமார் உளவே.

75 

நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் 
அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல.

76 

இல்என் கிளவி இன்மை செப்பின் 
வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும் 
இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும் 
கொளத்தகு மரபின் ஆகு இடன் உடைத்தே.

77 

வல்என் கிளவி தொழிற்பெயர் இயற்றே.

78 

நாயும் பலகையும் வரூஉம் காலை 
ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே 
உகரம் கெடுவழி அகரம் நிலையும்.-

79 

பூல்வேல் என்றா ஆல்என் கிளவியொடு 
ஆமுப் பெயர்க்கும் அம் இடைவருமே.

80 

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.

81 

வெயில்என் கிளவி மழைஇயல் நிலையும்.

82 

சுட்டு முதல் ஆகிய வகர இறுதி 
முற்படக் கிளந்த உருபியல் நிலையும்.

83 

வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும்.

84 

மெல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து ஆகும்.

85 

ஏனவை புணரின் இயல்பென மொழிப.

86 

ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்றே.

87 

ழகார இறுதி ரகார இயற்றே.

88 

தாழ்என் கிளவி கோலொடு புணரின் 
அக்குஇடை வருதல் உரித்தும் ஆகும்.

89 

தமிழ்என் கிளவியும் அதன் ஓரற்றே.

90 

குமிழ்என் கிளவி மரப்பெயர் ஆயின் 
பீர்என் கிளவியொடு ஓர் இயற்று ஆகும்.

91 

பாழ்என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே.

92 

ஏழ்என் கிளவி உருபியல் நிலையும்.

93 

அளவும் நிறையும் எண்ணும் வருவழி 
நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும் 
கடிநிலை இன்றே ஆசிரியர்க்க.

94 

பத்துஎன் கிளவி ஒற்றுஇடை கெடுவழி 
நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி.

95 

ஆயிரம் வருவழி உகரம் கெடுமே.-

96 

நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக் 
கூறிய நெடுமுதல் குறுக்கம் இன்றே.

97 

ஐ அம் பல் என வரூஉம் இறுதி 
அல்பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்.

98 

உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது.

99 

கீழ்என் கிளவி உறழத் தோன்றும்.

100 

ளகார இறுதி ணகார இயற்றே.

101 

மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும்.

102 

அல்வழி எல்லாம் உறழ்என மொழிப.

103 

ஆய்தம் நிலையலும் வரைநிலை இன்றே 
தகரம் வரூஉம் காலை யான.

104 

நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும் 
வேற்றுமை அல்வழி வேற்றுமை நிலையலும் 
போற்றல் வேண்டும் மொழியுமார் உளவே.

105 

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.

106 

இருள்என் கிளவி வெயில்இயல் நிலையும்.

107 

புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல.-

108 

மக்கள் என்னும் பெயர் நிலைகிளவி 
தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே.

109 

உணரக் கூறிய புணரியல் மருங்கின் 
கண்டுசெயற்கு உரியவை கண்ணினர் கொளலே.

110

9. குற்றியலுகரப்புணரியல்

ஈர் எழுத்து ஒருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் 
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் 
ஆயிரு மூன்றே உகரம் குறுகு இடன்.

அவற்றுள், 
ஈர்ஒற்றுத் தொடர்மொழி இடைத்தொடர் ஆகா.

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் 
எல்லா இறுதியும் உகரம் நிறையும்.

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி 
தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே.

யகரம் வருவழி இகரம் குறுகும் 
உகரக் கிளவி துவரத் தோன்றாது.

ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் 
வேற்றுமை ஆயின் ஒற்றிடை இனம்மிகத் 
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி.

ஒற்டை இனம்மிகா மொழியுமார் உளவே 
அத்திறத்து இல்லை வல்லெழுத்து மிகலே.

இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும் 
நடை ஆயியல என்மனார் புலவர்.

வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் 
வந்த வல்லெழுத்து ஒற்றிடை மிகுமே 
மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்று எல்லாம் 
வல்லொற்று இறுதி கிளைஒற்று ஆகும்.

மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை.--

10 

மெல்லொற்று வலியா மரப்பெயரும் உளவே.

11 

ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் 
அம்இடை வரற்கும் உரியவை உளவே 
அம்மரபு ஒழுகும் மொழிவயி னான

12 

ஒற்றுநிலை திரியாது அக்கொடு வரூஉம் 
அக்கிளை மொழியும் உளஎன மொழிப.

13 

எண்ணுப் பெயர்க்கிளவி உருபியல் நிலையும்.

14 

வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்.

15 

பெண்டுஎன் கிளவிக்கு அன்னும் வரையார்.

16 

யாதுஎன் இறுதியும் சுட்டு முதலாகிய 
ஆய்த இறுதியும் உருபியல் நிலையும்.

17 

முன்உயிர் வருமிடத்து ஆய்தப் புள்ளி 
மன்னல் வேண்டும் அல்வழியான.

18 

ஏனை முன்வரினே தான்நிலை இன்றே.

19 

அல்லது கிளப்பின் எல்லா மொழியும் 
சொல்லிய பண்பின் இயற்கை ஆகும்.

20 

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே.

21 

சுட்டுச் சினை நீடிய மென்றொடர் மொழியும் 
யாவினா முதலிய மென்றொடர் மொழியும் 
ஆயியல் திரியா வல்லெழுத்து இயற்கை.

22 

யாவினா மொழியே இயல்பும் ஆகும்.

23 

அந்நால் மொழியும் தம்நிலை திரியா.

24 

உண்டுஎன் கிளவி உண்மை செப்பின் 
முந்தை இறுதி மெய்யொடும் கெடுதலும் 
மேல்நிலை ஒற்றே ளகாரம் ஆதலும் 
ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்தே 
வல்லெழுத்து வரூஉம் காலையான.

25 

இருதிசை புணரின் ஏ இடை வருமே.

26 

திரிபுவேறு கிளப்பின் ஒற்றும் உகரமும் 
கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் 
ஒற்றுமெய் திரிந்து னகாரம் ஆகும் 
தெற்கொடு புணரும் காலையான.

27 

ஒன்று முதலா எட்டன் இறுதி 
எல்லா எண்ணும் பத்தன் முன்வரின் 
குற்றியலுகரம் மெய்யொடும் கெடுமே 
முற்றஇன் வரூஉம் இரண்டு அலங்கடையே.

28 

பத்தன் ஒற்றுக்கெட னகாரம் இரட்டல் 
ஒத்தது என்ப இரண்டு வருகாலை.

29 

ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது.

30 

நிறையும் அளவும் வரூஉம் காலையும் 
குறையாது ஆகும் இன்என் சாரியை.

31 

ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் 
நின்ற பத்தன் ஒற்றுக்கெட ஆய்தம் 
வந்து இடைநிலையும் இயற்கைத்து என்ப 
கூறிய இயற்கை குற்றியலுகரம் 
ஆறன் இறுதி அல்வழி யான.

32 

முதல்ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும் 
உகரம் வருதல் ஆவயினான.

33 

இடைநிலை ரகரம் இரண்டுஎன் எண்ணிற்கு 
நடைமருங் கின்றே பொருள்வயி னான.

34 

மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்.

35 

மூன்றன் ஒற்றே பகாரம் ஆகும்.

36 

நான்கன் ஒற்றே றகாரம் ஆகும்.

37 

ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும்.

38 

எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும்.

39 

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் 
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் 
பஃது என்கிளவி ஆய்த பகரம்கெட 
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி 
ஒற்றிய தகரம் றகரம் ஆகும்.

40 

அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியும் 
கிளந்த இயல தோன்றும் காலை.

41 

மூன்றன் ஒற்றே வந்தது ஒக்கும்.

42 

ஐந்தன் ஒற்றே மெல்லெழுத்து ஆகும்.

43 

க ச த ப முதன்மொழி வரூஉம் காலை.

44 

ந ம வ என்னும் மூன்றொடு சிவணி 
அகரம் வரினும் எட்டன்முன் இயல்பே.

45 

ஐந்தும் மூன்றும் ந ம வருங் காலை 
வந்தது ஒக்கும் ஒற்றுஇயல் நிலையே.

46 

மூன்றன் ஒற்றே வகாரம் வருவழி 
தோன்றிய வகாரத்து உரு ஆகும்மே.

47 

நான்கன் ஒற்றே லகாரம் ஆகும்.

48 

ஐந்தன் ஒற்றே முந்தையது கெடுமே.-

49 

முதல்ஈர் எண்ணின் முன்உயிர் வருகாலை 
தவல்என மொழிப உகரக் கிளவி 
முதல் நிலை நீடல் ஆவயி னான.

50 

மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் 
தோன்றிய வகரத்து இயற்கை ஆகும்.

51 

மூன்றன் முதல்நிலை நீடலும் உரித்தே 
உழக்கு என்கிளவி வழக்கத் தான.

52 

ஆறு என் கிளவி முதல் நீடும்மே.

53 

ஒன்பான் இறுதி உருபுநிலை திரியாது 
இன்பெறல் வேண்டும் சாரியை மொழியே.

54 

நூறு முன் வரினும் கூறிய இயல்பே.

55 

மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும்.

56 

நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா.

57 

ஒன்பான் முதல்நிலை முந்து கிளந்தற்றே 
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் 
நூறுஎன் கிளவி நகாரம் மெய்கெட 
ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப 
ஆயிடை வருதல் இகார ரகாரம் 
ஈறுமெய் கெடுத்து மகாரம் ஒற்றும்.

58 

ஆயிரக் கிளவி வரூஉம் காலை 
முதல்ஈர் எண்ணின் உகரம் கெடுமே.

59 

முதல்நிலை நீடினும் மானம் இல்லை.

60 

மூன்றன் ஒற்றே வகாரம் ஆகும்.

61 

நான்கன் ஒற்றே லகாரம் ஆகும்.

62 

ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும்.

63 

ஆறன் மருங்கின் குற்றியலுகரம் 
ஈறுமெய் ஒழியக் கெடுதல் வேண்டும்.

64 

ஒன்பான் இறுதி உருபுநிலை திரியாது 
இன்பெறல் வேண்டும் சாரியை மரபே.

65 

நூறாயிரம் முன் வரூஉம் காலை 
நூறன் இயற்கை முதல்நிலைக் கிளவி.

66 

நூறுஎன் கிளவி ஒன்றுமுதல் ஒன்பாற்கு 
ஈறுசினை ஒழிய இனஒற்று மிகுமே.

67 

அவை ஊர் பத்தினும் அத்தொழிற்று ஆகும்.

68 

அளவும் நிறையும் ஆயியல் திரியா 
குற்றியலுகரமும் வல்லெழுத்து இயற்கையும் 
முற்கிளந் தன்ன என்மனார் புலவர்.

69 

ஒன்றுமுதல் ஆகிய பத்து ஊர்கிளவி 
ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்றிடை மிகுமே 
நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும்.

70 

ஆயிரம் வரினே இன்ஆம் சாரியை 
ஆவயின் ஒற்றிடை மிகுதல் இல்லை.

71 

அளவும் நிறையும் ஆயியல் திரியா.

72 

முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் 
ஞ ந மத் தோன்றினும் ய வ வந்து இயையினும் 
முதல்நிலை இயற்கை என்மனார் புலவர்.

73 

அதனிலை உயிர்க்கும் யாவரு காலை 
முதனிலை ஒகரம் ஓ ஆகும்மே 
ரகரத்து உகரம் துவரக் கெடுமே.

74 

இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் 
வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின் 
மகர அளவொடு நிகரலும் உரித்தே.

75 

ல ன என வரூஉம் புள்ளி இறுதிமுன் 
உம்மும் கெழுவும் உளப்படப் பிறவும் 
அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி 
செய்யுள் தொடர்வயின் மெய்பெற நிலையும் 
வேற்றுமை குறித்த பொருள்வயி னான.

76 

உயிரும் புள்ளியும் இறுதி ஆகிக் 
குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி 
நெறிப் பட வாராக் குறைச்சொற் கிளவியும் 
உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின் 
ஐம்பால் அறியும் பண்புதொகு மொழியும் 
செய்யும் செய்த என்னும் கிளவியின் 
மெய்யொருங்கு இயலும் தொழில்தொகு மொழியும் 
தம்இயல் கிளப்பின் தம்முன் தாம் வரூஉம் 
எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும் 
அன்னவை எல்லாம் மருவின் பாத்திய 
புணரியல் நிலையிடை உணரத் தோன்றா.

77 

கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் 
வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் 
விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் 
வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் 
நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்.

78 

காணொளி

நிகழ்வுகள்