உலகத் தொல்காப்பிய மன்றம்
பிரித்தானியா-இலண்டன் கிளை

கிளை தொடக்கவிழா

வணக்கம்!

உலகத் தொல்காப்பிய மன்றம் இலண்டன் கிளை 30.06.2018 மாலை 5 மணிக்கு, இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் அலுவலக அரங்கில் (TMK House, 46. A East Avenue, Manor Park, London) தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இலண்டனில் வாழும், தொல்காப்பியத் தொண்டர் திரு. சு. சிவச்சந்திரன் ஐயா சிறப்பு விருந்தினராகவும், அமெரிக்கா, நியூசெர்சியில் வாழும் முனைவர் நா. க. நிதி அவர்களும், நெதர்லாந்தில் வாழும் பொறியாளர் கோபி இரமேஷ் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகவும் வருகை தந்திருந்தனர்.

திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பொறியாளர் அரிசு அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருத்தார். இலண்டனின் வாழும் தமிழ் ஆர்வலர் திரு. இராச பூபதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். முனைவர் மு. இளங்கோவன், திரு. விசாகன், திரு. குகன், திரு. முருகானந்தம், முனைவர் தங்கவேல், சீர்மிகு கௌசல்யா, திரு. வெண்ணரசன் ஆகியோர் கலந்துகொண்டு இலண்டனில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை அமைப்பதற்குரிய பல்வேறு கருத்துரைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் முன்வைத்தனர். பொறியாளர் சு. சிவச்சந்திரன் ஐயா, தொல்காப்பியச் சிறப்பினைக் குறித்தும், தமக்குத் தொல்காப்பியத்தில் ஆர்வம் ஏற்பட்டதன் பின்னணி குறித்தும் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

இலண்டனில் வாழும் திரு. இராச பூபதி அவர்களின் தலைமையில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இலண்டன் கிளை செயல்பட வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானித்தோம்.