உலகத் தொல்காப்பிய மன்றம்
புதுச்சேரி கிளை

மன்ற முகப்பு

உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளம் தொடக்க விழா

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளம் தொடக்க விழா மற்றும் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரியில் உள்ள செகா கலைக்கூடத்தில் 18.08.2015 மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட ஆட்சித் தலைவர் து. மணிகண்டன் இ.ஆ.ப. அவர்கள் கலந்துகொண்டு இணையதளத்தைத் தொடங்கிவைத்து வாழ்த்திப் பேசினார். இணையத்தின் தேவையையும் இணையத்தில் உள்ள தமிழ்ச் செய்திகளையும் எடுத்துரைத்துப் பேசினார். இணையம் வழியாகத் தொல்காப்பியம் உலகம் முழுவதும் பரவ உள்ள செய்தியைப் பாராட்டி, இதுபோன்ற செயல்களில் தமிழ் ஆர்வலர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் சு. அழகேசன் அவர்கள் தலைமையில் கருத்துரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார், அரங்க. மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் நோக்கவுரை யாற்றினார். பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் (செம்மொழி நிறுவன மேனாள் ஆய்வறிஞர்), முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்கள் (சென்னைப் பல்கலைக்கழகம்), முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), பேராசிரியர் சூசை அவர்கள் (திருச்சிராப்பள்ளி), பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்கள்(பிரான்சு), முனைவர் க.தமிழமல்லன்(ஆசிரியர்- வெல்லும் தூயதமிழ்), பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தொல்காப்பியத் தாவரங்கள் என்ற ஆய்வுநூல் எழுதிய திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டார்.
மன்றத் தொடக்க விழா - முனைவர் மு.இளங்கோவன் குறிப்பு!